Wednesday

உயர்வுக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்: ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சாதனை புரியும் இளைஞர்

தனது பண்ணை வயலில் ஜெயக்குமார்.
தனது பண்ணை வயலில் ஜெயக்குமார்.
படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார்.
அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். வைத்தீஸ் வரன்கோயில் அருகேயுள்ள மேலாநல்லூர் அவரது சொந்த ஊர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி விவசாயம் படித்து முடித்தவுடன் சென்னை சர்வதேச பள்ளியில் பணி. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணி முடித்துவிட்டு ஒரே நாளில் அதை உதறி விட்டு தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மேலாநல்லூரில் தனது தந்தையின் கடின உழைப்பால் வாங்கப்பட்ட 20 ஏக்கரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து பயன் ஈட்டி வருகிறார்.

வறட்சி பூமியிலும் லாபம் தரும் மிளகு சாகுபடி

வாசனைப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மிளகு. குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மிளகு, புதுக்கோட்டை போன்ற வறட்சி பகுதிகளிலும் இப்போது சாகுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே அணவயல்-பட்டிபுஞ்சையைச் சேர்ந்த விவசாயி தங்கையன் தனது தென்னந்தோப்பில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்து வருகிறார்.
தனது மிளகு சாகுபடி அனுபவம் குறித்து தங்கையன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கரில் மட்டும் தென்னையில ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யத் தொடங்கினேன். தற்போது அது 3 ஏக்கராக விரிவடைந்திருக்கிறது. மிளகு கொடிகளை தென்னை மரம், பலா மரத்துல ஏத்தி விட்டேன். அதிகமான இடை வெளி உள்ள இடத்துல 5 அடி இடைவெளியில கிலுவை, முருங்கை, கொன்றை மரங்களை நட்டு வைத்து அதிலும் மிளகு கொடியைப் படரவிட்டுள்ளேன்.

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன.
அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. 
காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி நிற்கின்றன. ஆறு ஏக்கரிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாதித்துள்ளார் விவசாயி மகாராஜன். தொட்டவுடனே சாதிக்கவில்லை. தோல்வி தந்த பாடம் தான், சாதிக்கத் தூண்டியது என்கிறார்.
ஏற்கனவே ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரி திருமுருகு, " 5 எக்டேர் வரை அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கச் சொல்லும் போதெல்லாம்', "இதெற்கு... காசை கரியாக்கவா' என்று விட்டுவிட்டேன். தண்ணீரின்றி தென்னை கருகிப் போனது. ஆறுஏக்கர் மாந்தோப்பிற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் தண்ணீர் ஊற்றிய மரத்திற்கு, மீண்டும் தண்ணீர் கிடைக்க ஒருவாரமானது.
மீண்டும் சொட்டுநீர் பாசனம் பற்றி கூறியதும், முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று சம்மதம் சொன்னேன். ஆறு ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, அரசே மானியம் தந்தது. கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து சொட்டுநீர் கருவிகளை அமைத்தேன். மின்மோட்டார் மூலம் உரம் தண்ணீரில் கலக்க தனி ஏற்பாடு செய்தேன். தற்போது ஆறு ஏக்கருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்து விடுகிறது. மின்செலவு குறைந்துள்ளது. களைகள் குறைந்து விட்டன. கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரில் மரங்கள் நன்றாக காய்த்து, மகசூலும் கிடைத்தது. மா மட்டுமல்ல... ஓராண்டுக்கு முன் கொய்யாவில் லக்னோ 49 ரகத்தில் 300 மரங்கள் வைத்து, பராமரித்து வருகிறேன். மாட்டு எரு, உரம் தருகிறேன்.
வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, மரத்திற்கு ஒரு டன் காய்கள் தான் கிடைத்தன. இப்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், இரண்டு டன் காய்கள் கிடைக்கின்றன. மழை பெய்தால் இன்னும் மகசூல் கிடைக்கும்.சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், ஆறு ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற முடிந்தது, என்றார்.
இவரிடம் பேச: 97867 51903.
எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21587&ncat=7


Sunday

5 சென்ட்... 8 மாதங்கள்... 47 ஆயிரம் ரூபாய்!

5 சென்ட்... 8 மாதங்கள்... 47 ஆயிரம் ரூபாய்!
குஷியான மகசூலுக்கு குலசை கத்திரிக்காய்!
 பாரம்பரிய மகசூல்
'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... நெய் மணக்கும் கத்திரிக்கா... நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா’... 'முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணக்காமல் இருக்காது. அசைவம், சைவம் என்று இரண்டு உணவுகளிலுமே இடம்பெறும் காய்களில் கத்திரிக்காய்க்கும் முக்கியமான இடம் உண்டே! வெள்ளைக்கத்திரி, பூனைக்கத்திரி, இலவம்பாடி முள்ளு கத்திரி, மணப்பாறை கத்திரி... என பிரத்யேகமான சுவைகளில் நாட்டுக் கத்திரி ரகங்கள் பல உள்ளன. அந்த வரிசையில்... திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான நாட்டு ரகம்தான், குலசை கத்திரி.

120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...

120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...
புவி வெப்பமயமாதல், மழையின்மை, தொடரும் வறட்சி... என அனைத்துக்கும், 'மரம் வளர்க்க வேண்டும்’ என்பதைத்தான் தீர்வாகச் சொல்கிறார்கள். இதனால்தான், தன்னார்வ அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், அரசுத் துறைகள் என அனைத்துமே மரம் வளர்ப்பைத் தீவிரமாகச் செய்து வருகின்றன. இந்நிலையில், 120 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து 'லிட்டில் ஊட்டி’ என்ற பெயரில் ஒரு காட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள், துரைசாமி-சிவகாமி என்ற டாக்டர் தம்பதியர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அடிவாரப்பகுதியான காஞ்சேரியில்தான் இருக்கிறது 'லிட்டில் ஊட்டி' பண்ணை. உள்ளே நுழைந்ததுமே மலை வாசஸ்தலத்துக்குச் சென்றது போன்றதொரு குளுமை. திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். ஏதோ ஓர் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்ட பிரமை.

Wednesday

லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்பு

தொடக்கத்தில் முதலீடு செய்ய ஓரளவு பணம், கொஞ்சம் இடம், நாமே களத்தில் இறங்கி உழைப்பதற்கான மனம் இருந்தால் வெண்பன்றி வளர்ப்பில் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதற்கான பெரும் வாய்ப்பு நம் முன்னே உள்ளது.
வெண்பன்றி இறைச்சிக்கான தேவை மிகவும் அதிகமாகவும் அதன் உற்பத்தி மிகவும் குறைவாகவும் இருப்பதால் விற்பனை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்றும், அதிக லாபம் கிடைப்பதாகவும் வெண்பன்றி உற்பத்தியாளர்கள் பலர் கூறுகின்றனர்.
"மற்ற எந்த கால்நடைகளை விடவும் வெண்பன்றி வளர்ப்பு அதிக லாபம் தரக் கூடியது" என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜ்.

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

மதுரை சமயநல்லூரில் இருந்து தோடனேரியை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மூலக்குறிச்சி. மண்ணுக்கு வெள்ளையடித்தது போல், "பளிச்' என்று இருந்தது. விளைச்சலுக்கு உதவாது என்று "பிளாட்' ஆக மாற இருந்த நிலத்தை வாங்கி, இன்று விளைநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார் விவசாயி வி.சி.வெள்ளைச்சாமி.
புல் கூட முளைக்காத நிலத்தில், இன்று மரங்கள் வளர்ந்து நிற்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பழைய இரும்புத் தொழில் தான் என் வியாபாரம். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டேன். இனி மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தான் இந்த இடத்தை வாங்கினேன்.
நிலம் வாங்கிய போதே பள்ளமான இடத்தை ஆய்வு செய்து, அதில் மீன்வளர்க்க ஆசைப்பட்டேன். நிலத்தை வாங்கி ஆசையாய் கொய்யா, சப்போட்டா, மா மரக்கன்றுகளை நட்டேன். நட்டதோடு சரி, பாதி செத்துவிட்டது. மீதியிருப்பதும் வைத்த கடனுக்காக நின்றது. நிலம் வாங்கிய போது இங்கு புல், பூண்டு வளரவில்லை. காக்கை, குருவி கூட பறக்கவில்லை.
"அகத்தி மரம் வளர்த்துப் பார்' என்றார்கள். சரியென்று அகத்தி கன்றுகளை நட்டேன். அதன் காற்றை சுவாசித்து சப்போட்டாவும், கொய்யாவும் கூடவே வளர்ந்தன. மரங்கள் மெல்ல வளர்ந்தாலும் பரவாயில்லை என, ரசாயன உரம் பக்கமே போகவில்லை. மாட்டுச்சாணமும், ஆட்டுபுழுக்கையும் தான் உரமாக தந்தேன். மெல்ல மெல்ல புற்கள் வளர்ந்தன. 20 சென்ட் பள்ளமான இடத்தில் இன்னும் சற்று ஆழம் தோண்டினேன். கடந்தாண்டு அக்டோபரில் பெய்த இரண்டு நாட்கள் மழையில், 20 சென்ட் நிலத்திலும் தண்ணீர் நிறைந்தது. கட்லா, சி.சி., மீன்களை வாங்கி விட்டேன்.
அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் இன்னமும் தண்ணீர் பாதியளவு உள்ளது. இதுவரை 100 கிலோ மீன்களை எடுத்துவிட்டேன். இன்னமும் 150 கிலோ மீன்கள் உள்ளன. சுத்தமான மழைநீரில் மீன்கள் கொழுகொழுவென்று வளர்வதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
மூன்றரை ஏக்கரில் சப்போட்டா, கொய்யா, நெல்லி, நாவலுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். பத்தடி நீள, அகல கிணற்று நீர் தான் ஆதாரம். புல்லைத் தாண்டி நெல் விளைந்தது. முதலாண்டில் ஏக்கருக்கு 
5 டன், அடுத்தாண்டு 12 டன், மூன்றாமாண்டு 20 டன் எடுத்தேன். இந்தமுறை மழைஇல்லாததால் வெறுமனே உழுது போட்டிருக்கேன். மழை பெய்தால், மண்ணாவது நல்ல உறிஞ்சும். காய்கறி, பந்தல் காய்கள் பயிரிடுவதற்காக, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தயாராக வைத்துள்ளேன்.
அஞ்சு ஆட்டுக்குட்டிகள் வாங்கி விட்டேன். இப்போது அஞ்சும் அடுத்த முறை குட்டிகளை உருவாக்கி விட்டது. அவற்றுக்கு தனியாக மரக்கொட்டில் அமைத்துள்ளேன். ஆட்டின் கோமியமும், புழுக்கையும் ஒன்றாக கலந்தால் நல்ல உரம் என்பதால், கொட்டிலின் கீழே சிமென்ட் சிலாப் அமைத்து, உரத்தை சேகரிக்கிறேன். மாட்டுக்கு தனியிடம் அமைத்து, மாட்டுச்சாணம் வாங்கியும் மண்புழு உரம் தயாரிக்கிறேன்.
என் நிலத்தில் இருந்து ஒரு சொட்டு மழைநீரை வெளியே விட மாட்டேன். அதற்கேற்ப ஆங்காங்கே வரப்பு வெட்டி மீன்குட்டையில் விழுமாறு செய்துள்ளேன். ஒற்றை ஈச்சமரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவி கூடு கட்டியது. இப்போது 30 குருவிகள் வரை இங்கேயே சுற்றித் திரிகின்றன.
நிலமென்றால் புல், பூண்டு, பாம்பு, பூச்சி, தவளை, மரம், செடி, கொடி, பறவைகளோடு மனிதர்களும் இணைந்திருக்க வேண்டும். மூன்றரை ஏக்கர் தரிசு நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி, சாதித்துவிட்டேன். சுற்றிலும் வேலியும், வேலியையொட்டி சவுக்கு கன்றுகளும் நட்டுள்ளேன். இன்னமும் ஒருஏக்கர் நிலம் தரிசாகத் தான் உள்ளது. இதை இனிமேல் தான் புல் விளை விக்க முயற்சி செய்ய வேண்டும், என்றார்.
அனுபவம் பேச: 94431 49166.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21402&ncat=7