Thursday

இயற்கை வழி வேளாண்மை

நமது நாட்டின் மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கேற்ப உணவுத் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு உயர் விளைச்சல் பயிர் ரகங்களைச் சாகுபடி செய்து வேளாண் உற்பத்தியை அதிகரித்தே ஆக வேண்டும்.
   ஆனால் வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது

மண் பரிசோதனை அவசியம் ஏன்

விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ரூ.5-ல் மண் பரிசோதனை செய்து தரப்படும் என கிருஷ்ணகிரி மண் பரிசோதனைக் கூட மூத்த வேளாண் அலுவலர் பி.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
  மண் பரிசோதனையின் அவசியம்:
  ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று பருவங்களில் உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து, அதிக மகசூல் பெறவும், நிலவளம் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்கவும் மண் பரிசோதனை அவசியம்.

Friday

அள்ளிக் கொடுக்கும் இயற்கை குண்டுமல்லி !


அள்ளிக் கொடுக்கும் இயற்கை குண்டுமல்லி ! 



"நாள் கணக்குல காத்திருந்து, அறுவடை நேரத்துல வெயிலுக்கோ, மழைக்கோ மகசூலை பந்தி வைக்குறதுதான் விவசாயிங்க பொழப்பா இருக்கு. ஆனா, பூ சாகுபடியில தினந்தோறும் அறுவடை செய்ய முடியும்கறதால லாப, நஷ்டம் வந்தாலும்... சராசரி வருமானத்துலயே கரையேறிடலாம். அதனாலதான் எங்க பகுதியில முக்கிய இடத்துல இருக்கு பூ சாகுபடி. அதுவும் நான் இயற்கை முறையில சாகுபடி செய்றதால குறைச்ச செலவுல கூடுதல் வருமானம் கிடைக்குது" என்கிறார் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்

Wednesday

பனை - கற்பகதரு

கருங்காலிக்கு நிகராகின்ற கற்பகதரு!

இப்பூவுலகில் கோடிக் கணக்கான தாவரங்கள் (Plants)  நிலத்திலும் நீரிலும் பரிணமித்துள்ளன என்பது தாவரவியலாளரது  (Botanist)  கூற்றாகும். விலங்குகளைப் (Animals)  பொறுத்தவரை இனப் பெருக்கம்  (Reproduction)  மேற்கொள்வதற்கு ஏற்ற பக்குவத்தை பெண் இனமே தன்னத்தே கொண்டுள்ளது.
பொதுவாகத் தாவரங்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை, பப்பாசி என்பனவற்றில் ஆண் பனை, பெண் பனை, ஆண் பப்பாசி, பெண் பப்பாசி என்று தனித்தனி மரம் உண்டாகி வளர்கின்றன. ஆண் பனையும், ஆண் பப்பாசியும் முதிர்ச்சியடைந்ததும் பூத்துக் குலுங்குவதுடனே தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றன என்றும் கூறலாம். காய், பழம், விதை என்பவற்றை இவற்றிலிருந்து பெறுவது முடியாத காரியமாகும்.
ஏலவே வட மாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் அதிக அளவு வளர்ந்து பயன் தருகின்ற பனை மரம் (Palmyra Tree)  பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
தேக்க (Teak), கருங்காலி (Ebony) போன்ற வலிமை மிக்க காட்டு மரங்களை வீட்டு நிர்மாணப் பணிக்கும், ஏனைய தளபாடங்கள் தயாரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதே வலிமை பனை மரத்திற்கும் உண்டு என்பதால் இம் மரத்திலிருந்து பெறப்படும் கைமரம், சிலாகை என்பவற்றை வீட்டுக் கூரை  (Roof) நிர்மாணிப்பதற்கு இன்றும் பலர் பயன்படுத்திய வண்ணம் உள்ளனர்.
நம் நாட்டில் ஒருவர் சுமார் நூற்று ஐம்பது பனை மரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தால் அவரது குடும்ப பொருளாதாரம்  (Economic)  நலிவுறுவதற்கு சந்தர்ப்பம் உண்டாகாது.
‘கற்பகதரு’ என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற பனை மரத்திலிருந்து பெறப்படுகின்ற அனைத்து பொருட்களும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாகிக் கொண்டே இருக்கின்றமை கண்கூடு, குருத்தோலை, காவோலை, பனை ஓலை, பனை மட்டை, பனஞ்சிராய், பனை ஈர்க்கு, பன்னாடை, பனஞ்சாறு, வெல்லம், பனம் கற்கண்டு, சக்கரை, நுங்கு பனம் பழம், பனாட்டு, பணம் விதை, பனங் கிழங்கு, புழுக்கொடியல், பனங் கள், பனஞ் சாராயம் (Palmyra Arrack)  போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
இனி பனை மரத்தை வளர்த்தெடுப்பது பற்றி சிறிது பார்ப்போம். இலங்கையில் இம் மரங்கள் உலர் வலயங்களில் செழித்து வளர்ந்து பயன் தருகின்றன. நம் நாட்டில் மனைமரத்துக்கு பெயர்பெற்ற மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். கற்பகத்தருவை உற்பத்தி செய்ய பெரும் உழைப்போ, மிகுந்த செல்வோ தேவைப்படாது.
பனம் விதையை சுமார் நாற்பது சென்ரி மீற்றர் ஆழத்தில் புதைத்து விட்டால் அது தானாகவே முளைத்து வளரக் கூடியது. வேலி அடைத்து காவல் காக்வோ அல்லது பசளையிட வேண்டிய அவசியமும் இல்லை. பெரும்பாலும் நூறு சதவீதமான விதைகள் முளைக்கின்றன.
பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என்று இரு வர்க்கங்கள் காணப்படுகின்றன. இது பனை மரத்திற்குள்ள சிறப்பு அம்சமாகும். பெண் பனை பூத்துக் காய்த்து பழுத்து இன விருத்தியைத் தொடருகின்றது. ஆண் பனை காய்ப்பதில்லை ஆனால் பெண் பனையைப் போன்று மற்றெல்லாம் பயன்களையும் நல்குகின்றது.
பனை மரத்தின் குருத்தோலையை எடுத்து ஈர்க்குகளை, நீக்கிவிட்டால் பல்வேறு வகையான பாய்கள், ஓலைப் பெட்டி, பை, கடகம், விசிறி, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள், தொப்பி, பணப் பை போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
முதிர்ந்த பனை மரத்தின் முற்றிய ஓலைகள் கிராமத்து வீடு வேய்வதற்குப் பெரிதும் பயன்படும். பனை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளில் வாழ்பவர்கள் சிறிதும் வெயில் வெப்பத்தினால் தாக்கப்பட மாட்டார்கள்.
மட்டையோடு கூடிய பனை ஓலை வேலி அடைப்பதற்குப் பெரிதும் பயன்படும். இந்தப் பனை ஓலை மட்டையின் இரு புறங்களிலும் மரம் அறுக்கும் வாளுக்கு இருப்பது போன்ற பற்கள் தென்படுகின்றன. இதனைக் கருக்கு என்றும் அழைக்கலாம். இதனால் நாய், நரி, ஓநாய் போன்ற பாலூட்டி விலங்குகள் (Mammals)  பனை ஓலை வேலிகளை ஊடுருவிச் செல்ல முடியாது. மீறிச்செல்ல எத்தனித்தால் அவற்றுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வீடுகளைச் சுற்றியும் பனை ஓலை வேலிகளை அமைக்கலாம். பனை ஓலை கொண்டு அடைக்கப்பட்ட வேலி குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பழுதுபடாமல் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது என்கின்றனர்.
பழைய பனை ஓலைகளை உதவாது என்று எண்ணி யாரும் எரித்து விடுவதில்லை. சிலவற்றை விறகாகப் பயன்படுத்தியது போக மிகுதியை நெல், மிளகாய், புகையிலை முதலான செடிகள் பயிராகும் நிலங்களில் வெட்டிப் புதைத்துவிடுவார்கள். இதனால் மண்ணில் உண்டாகும் பயிர்கள் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.
பனை மரத்திலேயே முற்றி உலர்ந்து தானாகக் கீழே விழும் ஓலைக்கு காவோலை என்று பெயர். இந்தக் காவோலை விறகாகப் பயன்படுகிறது.
பண்டைக்காலத்து மக்கள் தங்களுடைய விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதிய இலக்கியங்களை எல்லாம் பனை ஓலைகளினால் செய்யப்பட்ட ஏடுகளில் தான் எழுதி வைத்திருந்தார்கள். உலகம் போற்றும் திருவள்ளுவர்கூட தாம் யாத்த இணையற்ற திருக்குறளைப் பனை ஓலை ஏட்டில் தான் எழுதினார். சங்க இலக்கியங்கள் யாவும் பனை ஓலையினால் செய்யப்பட்ட ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டவைகளாகும்.
ஆதிகாலத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பனை ஓலையினால் தயாரிக்கப்பட்ட பறிகளையே பயன்படுத்தினார்கள்.
பனை ஓலையின் ஒரு பகுதி பனை ஈர்க்காகும். இந்த ஈர்க்கினால் முறம் (சுளகு) விளக்குமாறு என்பன தயாரிக்கப்படுகின்றன. பனை ஓலையினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெட்டிகள் மடங்காமலும் சுருங்காமலும், வளையாமலும் இருப்பதற்காக அமைக்கப்படும். சட்டத்தைத் தைப்பதற்கு பனை ஈர்க்கு பயன்படுகின்றது- பனை ஈர்க்கினால் கயிறு திரித்துக் கொள்வதுமுண்டு. திருகணை, உறி போன்ற சமையலறைப் பொருட்களும் ஈர்க்கினாலேயே தயாரிக்கப்படுகின்றன.
பனையிலிருந்து பெறப்பட்ட பன்னாடையை ஆதிகால மக்கள், தேன், நெய் முதலியவற்றை வடிகட்டுவதற்குப்
பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பனஞ்சாறு அல்லது பதநீர் மிகவும் சுவையுள்ள பணமாகும். இது பனை மரப் பாளையினின்றும் கிடைக்கின்றது.
இளம் பளம் பாளையைச் சுற்றி நாரினால் இறுகக் கட்டுவார்கள். பின்பு அப்பாளையின் முனையைச் சிறிதளவு சீவி அதன் உட்புறத்தில் சுண்ணாம்பு தடவிய மண் கலயத்தைக் கட்டிவிடுவார்கள். அந்தப் பாளையிலிருந்து கசியும் பனஞ்சாறு பானையில் விழுகின்றது. அதைத்தான் பதநீர் என்கின்றோம்.
இந்தப் பதநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் வெப்பம் குறைகின்றது. அத்துடன் பருகியவரை இது வீரியமடையச் செய்கின்றது.
வெல்லம் பனஞ் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது. கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற வெல்லத்தை விட இது உடலுக்கு உகந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பனை வெல்லத்தில் பல ஆயுள்வேத மருந்துகளைக் கலந்து உண்டார்கள்.
பனஞ் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்கற்கண்டும் மருந்துக்கு பெரிதும் பயன்படுகின்றது-
சித்த மருத்துவர்கள் பல மருந்துகளை பனங் கற்கண்டுடன் கலந்து உண்ணும்படி கூறுகின்றனர்.
பனஞ்சாற்றிலிருந்து சீனியையும் தயாரிக்கலாம். இது கரும்பிலிருந்து பெறப்படும் சீனியைப் போன்று வெண்மை நிறத்தைக் கொண்டிராது. ஐந்து சதாப்த காலங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டு தொழிலதிபர் ஒருவர் நம்நாட்டில் பனஞ்சாற்றிலிருந்து பனம் சக்கரை (Java)  தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை உருவாக்கினார். உற்பத்தியும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆனால் இலங்கை மக்கள் ஜாவா (நிava) விலிருந்து இறக்குமதியான சீனியை மிகவும் விரும்பி கொள்வனவு செய்ததினால் தொழிற்சாலை மூடப்பட்டது என்றும் அறிய முடிகின்றது.
காய்க்கும் இயல்புடையது பெண்பனை ஆகுமென்று முன்னர் பார்த்தோம். பனங்காய் முற்றுவதற்கு முன்பு நுங்காகவே தென்படுகின்றன. இந்த நுங்கு மிகவும் சுவைமிக்கதாகும். இதை அருந்தினால் சோர்வும், களைப்பும் நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
வைத்தியர்களின் கூற்றின் பிரகாரம் இளம் நுங்கு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குடலைத் (Intestine) துப்பரவு செய்வதுடன் வலுவூட்டும் பணியையும் மேற்கொள்கின்றது. வயது பேதமின்றி நுங்கை யாரும் சாப்பிடலாம்.
பனம் பழத்திலிருந்து பிழிந்து தயாரிக்கப்படுகின்ற பனாட்டு சுவை மிக்கது. பசி போக்கும் தன்மையும் கொண்டது. ஜாம் (Jam)  சந்தைக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதினால் பனாட்டின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டது என்றும் கூறலாம்.
நீண்ட நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக ‘ஏ’ ஒன்பது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததை நாமறிவோம். இதனால் வடபகுதியிலிருந்து பனை உற்பத்திப் பொருட்கள் தென் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ‘ஏ’ ஒன்பது  (A-Nine) பாதை திறந்து போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பியதினால் தென்பகுதி மக்களே வடபகுதி சென்று பனை உற்பத்திப் பொருட்களை சுளகு, ஒடியல், புழுக்கொடியல் என்பவற்றைக் கொள்வனவு செய்து எடுத்துச் செல்வதைக் காணமுடிகின்றது.
எனவே கற்பகத்தருவின் மகிமையை இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியமை உண்மை. கருங்காலிக்கு நிகர் கற்பக தரு என்பது நிதர்சனமாகும்.

அருணா தருமலிங்கம்,
வந்தாறுமூலை கிழக்கு, செங்கலடி.

Source: http://www.thinakaran.lk/2010/06/09/_art.asp?fn=d1006091



Monday

முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள்


முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள்... அதையும் மிஞ்சும் இயற்கை மஞ்சள்!
'அரியலூர்' என்றதுமே... முந்திக் கொண்டு நம் கண்களில் அறைவது முந்திரிக் காடுகள்தான். ஆனால், அத்தகைய பூமியில் கடந்த பத்து ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியும் ஜிலுஜிலுத்துக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யம்தானே!
அரியலூர்-ஜெயங்கொண்டம் புறவழிச் சாலையில் இருக்கும் செந்துறை எனும் ஊரைச் சேர்ந்த ராமலிங்கம்தான் மஞ்சள் விவசாயத்தில் பச்சைக் கொடி பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
பச்சைப்பசேல் என்று மஞ்சள் செடிகள் தழைத்து நிற்க, சந்தோஷமாக வளைய வந்துகொண்டிருந்தார் ராமலிங்கம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
''முந்திரிதான் இந்தப் பக்கத்துல முக்கியமான வெள்ளாமை. ஆனா, பருவம் தப்பிப் போயி, எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. தொடர்ந்து இப்படி நஷ்டப்பட்டதால... வேற பயிரு பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். பிறகுதான், மஞ்சள் சாகுபடி மேல கவனம் திரும்புச்சு. சேலம் ரக மஞ்சள் நல்ல மகசூல் கொடுக்கறதோட, விலையும் நல்லபடியா கிடைக்கும்னு கேள்விப்பட்டு சேலத்துல போய் வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். இன்னிக்கு இந்தப் பகுதியில சில விவசாயிக என்கிட்ட விதைமஞ்சள் வாங்கிட்டு போயி நடவு செய்ற அளவுக்கு எனக்கு வருமானத்தைக் கொடுத்துகிட்டிருக்கு இந்த மஞ்சள்'' என்றவர், முந்திரி விளைந்த மண்ணில் மஞ்சள் விளையும் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 800 கிலோ விதை!
செம்மண் கலந்த மணற்பாங்கான பூமியில் நன்றாக வளரக்கூடியது மஞ்சள். நல்ல வடிகால் நிலமாக இருப்பது நல்லது. வைகாசிப் பட்டம் ஏற்றது. ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய, 800 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். தேவையான கிழங்குகளை தரையில் ஒன்றாக சேர்த்து நேரடியாக வெயில்படாத பகுதியில் குவித்து வைத்து, மஞ்சள் தழை அல்லது கரும்புத் தோகையால் மூடவேண்டும். எப்போதும் ஈரம் இருக்குமாறு இந்தக் குவியலின் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போதுதான் எல்லா இடத்துக்கும் தண்ணீர் பரவி முளை கட்டும். ஒன்றரை அங்குலம் அளவுக்கு முளை வரும் வரை பதினைந்து நாளுக்கொரு தடவை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கிழங்கு நடுவதற்கு முன் அரை கிலோ காப்பர்-ஆக்ஸைடு, அரை லிட்டர் மோனோகுரோட்டோபாஸ் இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு கொப்பரையில் 50 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் மேலே சொன்ன கலவை 200 மில்லியை ஊற்றி, குச்சியால் கலக்க வேண்டும். நன்றாகக் கலக்கிய பின்பு, 200 கிலோ கிழங்கை குவியலிலிருந்து எடுத்து, கரைசலில் பத்து நிமிடம் வரை நனைத்து உலர வைக்கவேண்டும். இதேபோல் மொத்த கிழங்குகளையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது... வேர்ப்புழுத் தாக்குதலைத் தடுப்பதோடு, விரைவாகவும் முளைத்து வரும்.

ஓரத்தில் நடக்கூடாது..!
விதைநேர்த்தி செய்யும்போதே நடவுக்கான நிலத்தை புழுதிபட உழவு செய்து, நான்கு டன் தொழுவுரத்தை இறைக்க வேண்டும். உழுத நிலத்தை மாட்டு ஏர்முனையில் மரப்பலகை பார்கட்டி இழுத்துச் சென்றால், இருபுறமும் ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி இடைவெளியில் கரை ஒதுங்கும். இப்படி வயல் முழுவதும் கரையமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்போது நிலமும், கரைமேடும் ஈரமாக இருக்கும். இதுதான் கிழங்கு நடுவதற்கு ஏற்ற பக்குவம். முளைத்தக் கிழங்கை, கரையின் நடுப்பகுதியில் நான்கு விரல்கடை அளவுக்கு மண்ணிலே துளையிட்டு பதிக்க வேண்டும். கரும்பு நடுவதுபோல் கரையோரத்தில் நடக்கூடாது. அப்படி நடவு செய்தால் கிழங்கை வெட்டும்போது பாதிக் கிழங்குதான் கிடைக்கும்.
நிலம் ஈரமாக இருப்பதால், தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஐந்தாவது நாள் தண்ணீர் கட்டினால் போதும். ஆறாவது நாள், முளைத்து இலையாக வெளிவரும். இலை வரும்போதே களையும் வந்துவிடும். ஆட்களை வைத்து கைக்களை எடுத்த பிறகு, ஒவ்வொரு கிழங்குக்கும் தனித்தனியாக உரமிடவேண்டும். ஏக்கருக்கு ஜிப்சம் 4 மூட்டை, டி.ஏ.பி. 2 மூட்டை, பொட்டாஷ்
2 மூட்டை, யூரியா 2 மூட்டை, வேப்பம்பிண்ணாக்கு 2 மூட்டை என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, ஒவ்வொரு செடிக்குப் பக்கத்திலும் ஒரு கைப்பிடி அளவு உரத்தை வைத்து மண் அணைக்க வேண்டும். களையெடுக்கும்போது மண் சரிந்திருக்கும், அந்த மண்ணையே அள்ளி உரத்தை மூடினால் போதும்.
நடவு செய்தபின் பத்து நாளுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது மாதத்தில் இலைகள் பெரிதாக வளர ஆரம்பிக்கும் போது இலைச் சுருட்டுப்புழுவானது, இலையைச் சுருட்டிக்கொண்டு உள்ளே இருக்கும். இதனால் இலைகள் காய்ந்துவிடும். இதற்கு ஏக்கருக்கு கால் லிட்டர் மோனோ குரோட்டோபாஸ், கால் கிலோ கார்பன்டசிம் பூச்சிமருந்துடன் 120 லிட்டர் தண்ணீரில் கலந்துகொண்டு பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து 12 டேங்க் அடிக்க வேண்டும். இதைத் தெளிக்கும்போது இலையின் மேற்பரப்பு நனையுமாறு அடிக்க வேண்டும். சுருண்டிருக்கும் இலைக்குள் மருந்து சென்று புழுக்களை சாகடிக்கும்.
கருவியில் களை எடுக்கக் கூடாது..!
ஐந்தாவது மாதத்தில் மறுபடியும் ஒரு களை எடுக்க வேண்டும். இதற்கு களைவெட்டியோ, மண்வெட்டியோ வேறு கருவியோ பயன்படுத்தினால் கிழங்குகள் உடையும். அதனால் கருக்கருவாள் கொண்டு அறுத்துவிடுவது நல்லது. ஆறு மற்றும் ஏழாவது மாதங்களில் தலா ஒரு கைக்களை எடுக்க வேண்டும். இந்த இரண்டு களைகள்தான் வயலை சுத்தமாக்கி, கிழங்கை வெட்டுவதற்கு வசதியாக இருக்கும்.
எட்டாவது மாதத்தில் இலை சருகுபோல் காய்ந்துவிடும். இந்தத் தருணத்தில் ஊசி மண்வெட்டி கொண்டு கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டியக் கிழங்குகளை விரலி மஞ்சள், உருண்டை மஞ்சள், பனங்காலி மஞ்சள் என மூன்று விதமாக தரம் பிரிக்கலாம்.
உருண்டை மஞ்சளில் வேர் இருக்கும். அதை ஆள் வைத்து அரிவாள்மனையால் அறுத்துப் போட வேண்டும். இந்த உருண்டை மஞ்சள்தான் விதைக் கிழங்காகப் பயன்படும். அதனால் நமது விதைத் தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள மஞ்சளை அவித்து விற்று விடலாம்.
விரலி மஞ்சளை வேகவைத்து, காய வைத்து, மெஷின் மூலம் பாலீஷ் செய்து விற்கலாம். பாலீஷ் செய்யும்போதே வேர், செதில் எல்லாம் தனியாக பிரிந்துவிடும்.
பனங்காலி மஞ்சளை அப்படியே காயவைத்தால், வற்றல்போல் இருக்கும். அதையும் விற்று விடலாம்.
இப்படி தரம் பிரிக்கும்போது விரலிமஞ்சள் 12 குவிண்டால், உருண்டைமஞ்சள் 5 குவிண்டால், பனங்காலிமஞ்சள் ஒரு குவிண்டால் என்று ஒரு ஏக்கரிலிருந்து கிடைக்கும்'' என்றார்.
இயற்கையில் இனிக்கும் மஞ்சள்!
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிவியார்பாளையத்தைச் சேர்ந்த நடராஜன். அவரிடம் பேசியபோது... ''என் வயலில் ஈரோடு ரகத்தை அரை ஏக்கரிலும், ஒரிசா என்ற வீரிய ரகத்தை ஒன்றரை ஏக்கரிலும் சாகுபடி செய்துள்ளேன். இயற்கை முறையில் மஞ்சள் விவசாயம் செய்ய நினைப்பவர்கள் நிலத்தை உழுது நவதானியங்களை விதைக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து மடக்கி உழவு செய்ய வேண்டும். நன்கு உழுத பின்பு விதைமஞ்சளை சூடோமோனஸில் நனைத்து நடவு செய்ய வேண்டும். முப்பது நாட்களுக்குள் இரண்டு களை எடுக்க வேண்டும். அப்போதே ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் பிண்ணாக்கை வைத்து மண் அணைக்க வேண்டும்.
நடவு செய்த இரண்டு மாதத்தில் பஞ்சகவ்யாவை 15 நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு டேங்குக்கு 300 மில்லி கலந்து ஏக்கருக்கு 15 டேங்க் அடிக்க வேண்டும். நவதானியங்களை விதைத்து மடக்கி உழவு செய்வதோடு, தொழுவுரமும் போட்டு நடவு செய்வதால், வேறு உரம் எதுவும் தேவைப்படாது.
10% கூடுதல் மகசூல்!
பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க இயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தினாலே போதும். இயற்கை விவசாயத்தில் செய்யும்போது மஞ்சள் தரமானதாக, விஷத் தன்மையற்றதாக இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ரசாயன முறையைவிட இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு. வீரியரக மஞ்சளை நடவு செய்துள்ளதால் கடந்த முறை எனக்கு விரலிமஞ்சள் 16 குவிண்டால், குண்டு மஞ்சள் 4 குவிண்டால் என மொத்தம் 20 குவிண்டால் கிடைத்தது. வீரியரகத்தில் பனங்காலிமஞ்சள் பெரும்பாலும் வருவதில்லை.
இயற்கை மஞ்சளை அதிகம் விரும்பும் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.200 முதல் 400 வரை கூடுதலாக விலை தருகிறார்கள். இயற்கை
மஞ்சள்... நன்கு பெரியதாகவும், மினுமினுப்பானதாகவும், கூடுதல் நறுமணத்துடனும் இருப்பதே வியாபாரிகள் அதிகம் விரும்பக் காரணம்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
மஞ்சள் விலை... உச்சத்தில்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4,000 முதல் 6,000 வரை விற்பனை இருந்தது. வடமாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் மஞ்சள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத துவக்க நிலவரப்படி, ஒரு குவிண்டால் விரலிமஞ்சள் குறைந்தபட்சமாக 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. கிழங்குமஞ்சள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய், அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை ஆகிறது.
Source:pasumaivikatan

அள்ளிக் கொடுக்கும் அலகாபாத் கொய்யா


கொய்யாப்பழம்ம்ம்ம்... கொய்யாப்பழம்ம்ம்ம்ம்...''
-பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலெல்லாம் நீக்கமற ஒலிக்கும், இந்தக் குரலை முந்திக் கொண்டு கொய்யாவின் வாடை மூக்கைத் துளைக்க... நாக்கைச் சுழற்றிக் கொண்டு வாங்கிச் சுவைக்கத் தயங்க மாட்டோம் நம்மில் பலர். காரணம்... அதன் சுவை அப்படி!
அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் குடியேறிய பழம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். என்றாலும், நம் மண்ணின் மணத்தோடு ஒன்றிப்போன பழங்களில் ஒன்றாகிவிட்டது கொய்யா.
பரவலாக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளைந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில், 'ஆயக்குடிக் கொய்யா, தஞ்சாவூர் மாவட்டத்தில் விளார் கொய்யா, தேனி மாவட்டத்தில் பி.நாகலாபுரத்து செங்காட்டுக் கொய்யா' என தனித்துவம் பெற்ற நாட்டுக் கொய்யா வகைகள் ஏகப்பட்டவை இருந்தன. காலப்போக்கில் அந்த இடத்தை வீரிய ஒட்டுரக கொய்யாக்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
ஒட்டு ரகத்துக்குத்தான் இப்ப மவுசு!
பி. நாகலாபுரத்தில் பல வருஷங்களாக கொய்யா சாகுபடி செய்து வரும் ஆண்டவர், அதைப்பற்றி பேசுகிறார்.
''எங்க பகுதி கொய்யாவுக்கு சந்தையில ஏகமரியாதை. பஸ் ஸ்டாண்டுலயெல்லாம் 'நாகலாபுரத்து நாட்டுக் கொய்யா'னு கூவிதான் விப்பாங்க. ஆனா, நாட்டுக் கொய்யா சின்னதா இருக்குறதால... அது அந்த அளவுக்கு விலை போகல. ஒட்டுரகம் பெரிசு பெரிசா இருக்கும்கிறதால மக்கள் அதைத்தான் தேடி வாங்குறாங்க. அதனால நாங்களும் நாட்டுக் கொய்யா சாகுபடியைக் குறைச்சுட்டு, ஒட்டுரகத்துக்கு மாறிட்டோம். அப்படியும் இந்த பகுதியில விளையற கொய்யாவுக்கு இன்னமும் தனி கிராக்கி இருக்குது.
பரவலா சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா ரெண்டும் சாகுபடி பண்றாங்க. ரெண்டுலயும் விதையுள்ளது... விதையில்லாததுனு ரெண்டு வகை இருக்கு. மொத்தம் நாலு வகை! நான் 'லக்னோ-49', 'அலகாபாத்' னு ரெண்டு வெள்ளைக் கொய்யா வகைகளைத்தான் பயிர் பண்றேன்'' என்று முன்னுரை கொடுத்தவர் நேரடியாக சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார். அது-
மழைக்கு முன் நடவு!
கொய்யா தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா வகையான மண்ணிலும் வரும். பருவமழைக்கு முந்தைய காலம், நல்ல பட்டம். சொட்டுநீர்ப் பாசனமாக இருந்தால், ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் (இவர் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறார்). வழக்கமாக, கொய்யாவில் விதையை நடுவது கிடையாது. பதியன் முறையில் உருவாக்கப்பட்ட நாற்றுகளைத்தான் நடவேண்டும். அதனால் தரமான நாற்றுகளை வாங்குவது அவசியம்.
ஏக்கருக்கு 193 மரம்!
தோட்டத்தை நன்கு புழுதி பட இரண்டு சால் உழவு ஓட்டி, நூல் பிடித்து, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் அடையாளக் குச்சி நட வேண்டும் (ஏக்கருக்கு 193 குச்சி வரும்). ஒவ்வொரு குச்சி உள்ள இடத்தையும் மையமாக வைத்து ஒன்றரை அடி சதுரத்தில், அதே அளவு ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழியிலிருந்து எடுத்த மண்ணை நிலத்தில் பரவலாக பரப்ப வேண்டும். இரண்டு, மூன்று வாரங்கள் குழியை ஆறவிட்டு, ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணோடு, ஒரு கூடை மக்கிய பண்ணைக் குப்பையைக் கலந்து குழியை மூடி, மீண்டும் அடையாளக் குச்சியை வைத்து விட வேண்டும்.
வேரில் கவனம்!
மறுநாள் பதியன் நாற்றின் மேல் தண்ணீர் தெளித்து, மண்சட்டியை அரிவாளால் தட்டி உடைத்து வேர் பகுதி மண் அலுங்காமல், ஒவ்வொரு குழியின் நடுவிலும் பதியனின் வெட்டுவாய் மண்ணுக்குள் இருக்குமாறு நட்டு, சுற்றிலும் காலால் மிதித்து சமப்படுத்தி உடனடியாக தண்ணீர்விட வேண்டும். சொட்டுநீர் அமைப்பதாக இருந்தால் நடவுக்கு முன்பே அமைத்துவிட வேண்டும். எந்த வகைப் பாசனமாக இருந்தாலும், நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
கவாத்து முக்கியம்!
நடவு செய்த இரண்டு மூன்று மாதங்களிலேயே கொய்யா பூ எடுத்து விடும். கொய்யா நீண்டகாலப் பயிர் என்பதால் எட்டாவது மாதம் வரை வரும் பூக்கள் அனைத்தையும் கிள்ளி எடுத்து விட வேண்டும். அதேபோல உயரமாகவும் வளர விடாமல் கவாத்து செய்து, பக்கவாட்டில் கிளைகள்விட்டு புதர்போல படர்ந்து வளரும்படிவிட வேண்டும். நுனிக்கொழுந்தைக் கிள்ளிவிட்டால் பக்கக் கிளைகள் புதிதாக உருவாகும். அப்போதுதான் அதிக பழங்கள் கிடைக்கும். தவிர, பறிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதற்காகத்தான் 'ஆட்டை அடிச்சு ஓட்டணும், கொய்யாவை ஒடிச்சு வளர்க்கணும்' என்கிற பழமொழியைச் சொல்லி வைத்தார்கள்.
ரசாயனம் கூடவே கூடாது!
கொய்யா மரத்துக்கு ரசாயன உரம் வைக்கவே கூடாது. ரசாயன உரம் ஊட்டப்பட்ட மரங்களில் பழங்கள் நன்றாக வருவதில்லை. ஆண்டுக்கு மூன்று முறை தொழுவுரம் கொடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் வந்தால், மூலிகைப் பூச்சிவிரட்டி அடிக்கலாம். பஞ்சகவ்யா தயாரிக்க முடிந்தால், பத்து லிட்டருக்கு (1 டேங்க்) 300 மிலி வீதம் கலந்து, ஆண்டுக்கு ஐந்து முறை தெளிக்கலாம் (ஆண்டவர், தன் நண்பரிடம் பஞ்சகவ்யா வாங்கிப் பயன்படுத்துகிறார்). பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யா இரண்டையுமே கனமழை காலத்தில் தெளிக்கக் கூடாது. எட்டாவது மாதத்துக்குப் பிறகு பூக்களை அப்படியே விட்டால், பிஞ்சாகி காய்க்கத் தொடங்கி விடும். அதிலிருந்து முப்பது ஆண்டுகள் வரைகூட காய் பறிக்கலாம்.
ஆண்டு முழுவதுமே காய்கள் கிடைக்குமென்றாலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகப்படியான காய்கள் கிடைக்கும். காய்கள் இருப்பதைப் பொறுத்து பறித்துக் கொள்ளலாம்.
பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 500 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 100 முதல் 300 கிராம் வரை இருக்கும். குறைந்தபட்சமாக ஒரு மரத்தில் 50 கிலோ காய்கள் வரை கிடைக்கும். ஏக்கருக்கு 193 மரங்கள் என்பதால், 9 டன்னுக்கு குறையாமல் காய்கள் கிடைக்கும். கிலோவுக்கு குறைந்தபட்சமாக ஏழு ரூபாய் கண்டிப்பாகக் கிடைக்கும். கொய்யா சாகுபடியில கவாத்தும் அறுவடையும்தான் வேலை. வேறு வேலையே கிடையாது.
நேரடி விற்பனையில் அதிக லாபம்!
சாகுபடி பாடத்தை முடித்த ஆண்டவர், ''முதல்ல விற்பனை வாய்ப்பை நல்லா கணிச்சுக்கணும். கமிஷன் மண்டிக்கு அனுப்பினா... கண்டிப்பா கட்டாது. போக்குவரத்து வசதியுள்ள தோட்டமா இருந்தாதான் கொய்யா சாகுபடியில இறங்கணும். சைக்கிள்லயும், கூடையிலயும் எடுத்துக்கிட்டுப் போய் விக்கிற சில்லறை வியபாரிக நம்ம தோட்டத்துக்கே வந்து எடை போட்டு எடுத்துட்டுப் போற மாதிரி இருக்கணும்.
காய் பறிக்கிற அளவு வந்துடுச்சுனா... காவல் காக்குறதும் ரொம்ப முக்கியம். அப்பதான் லாபம் கிடைக்கும். நான் 15 ஏக்கர்ல கொய்யா போட்டுஇருக்கறதால காவலுக்கு ஆள் போட்டிருக்கேன். வாரத்துக்கு ரெண்டு தடவை தோட்டத்துக்கே வியாபாரிக வந்து காய் எடுத்துக்குறதால போக்குவரத்துச் செலவு, கமிஷன் எதுவுமில்லாம நல்ல வருமானம் கிடைக்குது'' என்று உஷார் ஆலோசனைகளையும் தந்தார்.


Source:pasumaivikatan

Friday

ஆடு வளர்ப்பில் அடுத்த மைல்கல்


ஆடு வளர்ப்பில் அடுத்த மைல்கல் !
பளிச்...பளிச்....
பிளாக் ஆடு வளர்ப்பு...
எல்லா வகையான
இலைதழைங்களையும் தின்னும்...
7 மாசத்துல 20 கிலோ எடை...
வான்கோழி, காடை, வெண்பன்றி, முயல், கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும்... நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.