Monday

பாக்கு சாகுபடி

ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும்.இதில், ஊடுபயிர்களும் விதிவிலகல்ல. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும். தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்… வில்சன் ராஜப்பன்.
நாகர்கோவில் –சுருளங்கோடு சாலையில் பதினெட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, அருமநல்லூர் கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் கவால் வீரர்கள் போல வரிசை கட்டி நிற்கின்றன தென்னை மரங்கள். இங்குதான், வில்சன் ராஜப்பனின் பாக்குத் தோட்டம்.
எங்க குடும்பத்திற்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். முக்கால் ஏக்கரில் பாக்கும், அதற்கு ஊடுபயிராக ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிறேன். இது போக நிறைய தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்தும் வாழை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். பாக்குக்கு  அதிக தண்ணீர் தேவை என்பதால் வாய்க்கால் பாசனம்தான்.

Sunday

குறைவே இல்லாத வருமானம்... கொடையாக வரும் உற்சாகம்... போலீஸ் இன்ஸ்பெக்டரின் சம்பங்கி சாகுபடி!


குறைவே இல்லாத வருமானம்... கொடையாக வரும் உற்சாகம்...
போலீஸ் இன்ஸ்பெக்டரின் சம்பங்கி சாகுபடி!
''எல்லாரோட வாழ்க்கையுமே இயந்திரமயமாயிட்டதால, எதையோ தொலைச்ச உணர்வு... எல்லா மனுஷனுக்குள்ளயும் இருக்கு. அதனாலதான் வாழ்க்கையை ரசிச்சு வாழணும்னு எவ்வளவு போராடினாலும், பலருக்கும் அது கைகூடுறதேயில்லை. அரசுப் பணியில் இருந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை நான் திரும்பவும் கையிலெடுத்த பிறகுதான், எனக்கு வாழ்க்கை திருப்தியா இருக்கு'' என்று உணர்வு பொங்கப் பேசுகிறார்... கரூர் மாவட்டம், க.பரமத்தி, வேட்டையார்பாளையம் கிராமத்தில் விவசாயம் செய்து வரும், மனோகரன். இவர், தமிழக காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
காவல் துறையில் இருந்து கழனிக்கு!
தோட்டத்து வேலைகளில் காலை நேரத்து உற்சாகம் பொங்க ஈடுபட்டிருந்த மனோகரனைச் சந்தித்தபோது... ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தார், தன் அனுபவங்களை, இப்படி- ''விவசாயம் எங்களுக்கு பரம்பரைத் தொழில். எனக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை கிடைச்சதால விவசாயத்தை விட்டுப் போயிட்டேன். அப்பாவுக்குப் பிறகு,  விவசாயம் செஞ்சு ஜெயிக்க முடியுங்கிற நம்பிக்கையும் இல்லை. அதனால, நிலத்தை சும்மாதான் போட்டு வெச்சிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருஷம் போலீஸ் வேலை செஞ்ச பிறகு, இப்போதான் எனக்கு 'விவசாயத்துலயும் ஜெயிக்க முடியும்’னு நம்பிக்கை வந்துருக்கு. அதுக்குக் காரணம் 'பசுமை விகடன்’தான். இதைப் படிக்க ஆரம்பிச்சுட்டுத்தான் நம்பிக்கையோட நிலத்துல கால் வெச்சுருக்கேன். விவசாயத் தொழில்ல கிடைக்கிற திருப்தி... வேற எதுலயும் கிடைக்கிறதில்லை.

இணையற்ற இருங்கு சோளம் ! பராமரிப்பும் வேணாம்... தண்ணீரும் வேணாம்...மானாவாரி மகசூல்!


இணையற்ற இருங்கு சோளம் !
பராமரிப்பும் வேணாம்... தண்ணீரும் வேணாம்...மானாவாரி மகசூல்!
பொய்த்துப்போன பருவமழை, கானல் நீரான காவிரி, மின்னலாய் வந்து மறையும் மின்சாரம்... என பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கிறது தமிழக விவசாயம். இவ்வளவு இன்னலுக்கு இடையிலும் தண்ணீரையும், உரங்களையும் கொட்டி விளைய வைக்கப்படும் நெல்லுக்கு... கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளைக்கூட, கிலோ 40 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட ஐந்து மாத உழைப்பையும், சில ஆயிரங்களையும் கொட்டி விளையவைக்கும் நெல்லுக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு 11 ரூபாய்தான் கிடைக்கிறது. முதலுக்கே மோசமாகி, கடைசியில் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது!
''இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாம்தான். விதைப்புக்கும், அறுவடைக்கும் இடையே வேலையே வைக்காத சிறுதானியங்களையும், மண்ணுக்கேற்ற ரகங்கள்... மழையை அதிகம் எதிர்பார்க்காத ரகங்கள், மானவாரி ரகங்கள் என பாரம்பரியம் மிக்க ரகங்களையெல்லாம்

பராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை... வளமான வருமானத்துக்கு... செடி முருங்கை...


பராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை...
வளமான வருமானத்துக்கு... செடி முருங்கை...
'ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்தால்தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும்’
- பல ஆண்டுகளாக விவசாய வல்லுநர்கள் பலரும் கூறி வரும் வித்தை இது. இப்படி வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலும் ஒருவர்.
சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் வருகிறது, நரையன் குடியிருப்பு. அதன் அருகிலுள்ள கருவேலம்பாடு கிராமத்தில்தான் ஜெயபாலின் பண்ணை இருக்கிறது. ரம்மியமான சூழலில், செடிமுருங்கை, தென்னை, வாழை, மா, எலுமிச்சை, கொய்யா, நெல்லி, சப்போட்டா... என மகசூலை வாரி குவிக்கும் மரங்கள் சூழ அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறது, பத்து ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பண்ணை.

தரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..!

தரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..!

பயிருக்கு உயிர்நாடி, விதைதான். தரமான விதையையோ, நாற்றையோ உபயோகப்படுத்தினால்தான், விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும். இந்த எதார்த்தம் தெரிந்திருந்தாலும்... சில ஏமாற்றுக்கார நாற்றுப் பண்ணையாளர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீரியமில்லாத விதைகள், தரமில்லாத நாற்றுகளை வாங்கி, ஏமாந்து விடுகிறார்கள், விவசாயிகள் பலரும். அதேபோல பலருக்கு எந்தப் பண்ணையில் தரமான நாற்று கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதே சிரமமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் ஒரு நாற்றுப் பண்ணை, தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது... என்பதைத் தெரிந்து கொள்வது... நல்லதுதானே!
வேலூர்-சென்னை சாலையில் இருபத்தைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, விசாரம் எனப்படும் கிராமம்.