Wednesday

ஜப்பானியக் காடைவளர்ப்பு


ஜப்பானியக்காடை கோழிகள் சிறிய கூண்டுகளில் வாழக்கூடும் ஒரு திடமான பறவை இனமாகும். கறி மற்றும் முட்டைக் கோழிகளில் காணப்படும் பொதுவான நோய்களுக்கு காடைகள் மட்டும் விதிவிலக்கல்ல.

இனம் குஞ்சுகளைப் பராமரித்தல்: புதிதாக பொறிக்கப்பட்ட காடைக் குஞ்சுகள் மிகவும் சிறியதாக (6-7 கிராம் எடை) காணப்படும். இந்த இனம் குஞ்சுகளுக்கு சரியான அடைகாத்தலுக்குரிய சீதோஷ்ண நிலையை உருவாக்கிக் கொடுப்பது மிக மிக அவசியமானதாகும். இக்குஞ்சுகளுக்குப் பிறந்த நாள் முதல் 3-4 வார வயது வரை கூடுதல் வெப்பம் தேவைப்படுகிறது. ஒரு வர்த்தக வெப்பப் பதனக்கருவி மூலமோ அல்லது மின் விளக்குகள் மூலமோ போதுமான அளவு வெப்பத்தை வெற்றிகரமாக கொடுக்க இயலும்.
மேலும், இவ்வகை கருவிகள் கூண்டுகளின் உட்புற தரை மட்டத்திலிருந்து 30-46செ.மீ. அளவு உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் வார காலத்தில் வெப்பம் 35 டிகிரி செ. என்ற அளவில் இருக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு வாரமும் 3.5 டிகிரிசெல்சியஸ் அளவு வரை வெப்பத்தைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும். இவ்வாறு நான்கு வார வயது வரை கடைபிடிக்க வேண்டும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால நாட்களில், போதுமான அளவு வெப்பத்தைக் கொடுக்கத் தவறினால், காடைகளின் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படும். மேலும், இரவு நேரங்களில் குஞ்சுகளை குளிர்ந்த காற்று படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும்.

இளம் காடைக் குஞ்சுகளுக்கு குடிதண்ணீர் குவளைகள் மூலம் தண்ணீர் கொடுக்கும்பொழுது மிகவும் கவனம் தேவை. ஏனெனில், சிறிய குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறக்க நேரிடும். இதனைத் தவிர்க்க தண்ணீர் குவளையில் கூழாங்கற்களை நிரப்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளம் காடைக் குஞ்சுகள் ஒரு வார வயது அடைந்தவுடன், கூழாங்கற்களை அப்புறப்படுத்திவிடலாம். தண்ணீர் குவளைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
கோழிகளின் மலக்கழிவுகளின் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்வதற்கும், எந்நேரமும் தரையை உலர்ந்த நிலையில் பராமரிக்கவும் கூளம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மர இழைப்புக் கழிவுகள், மரத்தூள்கள், அரிசி உமிகள் மற்றும் மணல் போன்ற பொருட்கள் சிறந்த கூளப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. கொட்டகையன் தரையிலிருந்து 5 முதல் 6 செ.மீ. உயரம் வரை கூளத்தை பரப்ப வேண்டும். மேலும், கூளப்பொருட்களின் மேல்புறத்தை ஒரு வார காலத்திற்கு தினசரி நாளேடு காகிதத் தாள்களின் மேல் தூவி இளம் காடைக்குஞ்சுகளை தீவனத்தை உட்கொள்ள ஊக்குவிப்பதற்காகவாகும். ஒருவேளை காடைக்குஞ்சுகளை கம்பி வலைக்கூண்டில் வளர்க்க நேரிட்டால், அதன்கீழ்த் தரைப்பகுதியை முதல்வார காலத்தில் காகிதத் தாள்களைக் கொண்டு மறைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், காடைகளின் கால்கள் காயமாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக கம்பி வலைக் கூண்டுகளில் வளர்க்கப்படும் காடைகளில் இறகு கொத்தல் அல்லது தன்னினம் உண்ணல் போன்ற தீய பழக்கங்கள் காணப்படும். எனவே காடைகள் இரண்டு வார வயதில் இருக்கும்பொழுது அலகு கத்தரிப்பு செய்வது மிகவும் அவசியமானதாகும். அவ்வாறு அலகு சீர் செய்யப்பட்ட காடைகளின் தீவன மற்றும் குடிதண்ணீரின் அளவுகளை அதனுடைய உபகரணங்களில் அதிகப்படுத்த வேண்டும்.

வீட்டமைப்பு மற்றும் அதன் உபகரணங்கள்: தொன்றுதொட்டு காடைகள் கூடங்கள் போன்ற சிறிய அறைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அம்மாதிரியான அறைகள் நன்கு காற்றோட்டமாகவும் பூனைகள், எலிகள், பெரிய பறவைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, எந்தக் காரணத்திற்காக காடைகளை வளர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வீட்டமைப்பு வடிவமைக்க வேண்டும். லாபகரமான முட்டை மற்றும் இறைச்சி தொழிலுக்காக வளர்த்தால் சிறிய கம்பி வலை கூண்டுகளில் வளர்ப்பதே சாலச்சிறந்தது. பொழுதுபோக்குக்காக வளர்ப்பதென்றால் ஆழ்கூள முறையிலோ அல்லது பெரிய கம்பிவலை கூண்டுகளிலோ வளர்க்கலாம். (தகவல்: டாக்டர் .வாசன், இணைப் பேராசிரியர், நாமக்கல். 94446 94530)

-கே.சத்தியபிரபா,உடுமலை.

1 comment:

Unknown said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238