Sunday

மண்புழு என்ற ஆத்ம நண்பன்

"பிரபஞ்ச வரலாறை எழுத வேண்டுமெனில், அதில் பலவற்றின் முக்கிய பங்களிப்பைப் பற்றி எழுத வேண்டும். யாரை எழுத மறந்தாலும் ,மறுத்தாலும், மண்புழுக்கள் என்ற சிறிய ஜீவராசி குறித்து எழுத மறந்துவிடக் கூடாது. "இவ்வாறு கூறியவர் சார்லஸ் டார்வின். மண்புழு உரம், இயற்கை முறையிலான விவசாயம், சுயதயாரிப்பாகத் தயார் செய்யக்கூடிய
பஞ்சகவ்யம், குணபம், பூச்சிக்கொல்லி மருந்துகளான புகையிலைக் கரைசல், மிளகாய்-இஞ்சிக் கரைசல் கலந்து தெளித்தல் போன்றவையெல்லாம், ஏகோபித்த வரவேற்புடன் இன்றுள்ள விவசாயிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இன்றும், இது குறித்த சந்தேகமும், அசிரத்தையும், கேலிக்குரிய பொருளாகவும் அவை விளங்குகின்றன. குறிப்பாக, விவசாயிகள் இவ்வகையான பொருட்களைத் தயாரிக்க, உடல் வணங்கி, தங்கள் வாழ்ககையில் செலவழிப்பதில் சில மணி நேரங்களை இதற்காக ஒதுக்கினாலே போதுமானது. ஆனால் யாரும் இவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு தயார் செய்தாலும், அவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறார்கள். மனக்குழப்பத்தில் மீண்டும் வேதிப் பொருட்களின் பக்கமே திரும்புகிறார்கள். அது இயற்கை விவசாயமோ, செயற்கை விவசாயமோ அங்கு மண்புழுக்களின் பங்கிருப்பின் ,விளைச்சல் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பம்சத்துடன் காணப்படும். உலகெங்கும் சுமார் 6000க்கும் அதிகமான மண்புழுக்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆப்ரிக்கன் யுஜினா, மெகாஸ் கோலக்ஸ் மாருடி போன்றவை அதிகமாக உரம் தயாரிப்பில் உபயோகிக்கப்படுகின்றன.


கரிமம் நிறைந்த வளமான மண்ணில் உள்ள நுண் உயிர்கள் மண் வளத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் பயிர்கள் செழுமையாக வளர்ந்து மகசூல் தரும். அசோஸ் ஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் --காளான் உயிரிகள், பாசி உயிரிகள் எல்லாமே கோடிக் கணக்கில் இருக்கும். வளமான கரிமம் இல்லாதபோது, மண்ணின் உயிரிகளை எடுத்து ,கல்சர் செய்வதன் மூலம் பன்மடங்கு பெருக்கி ,மீண்டும் மண்ணிற்கே வழங்கும் இன்றைய தொழில் நுட்பம் "உயிரி உரப் பெருக்கல்" என்று அழைக்கப்டுகிறது. சமீப காலமாக மண்ணை ஆராயும் ஆய்வாளர்கள் ரசாயன உரங்களின் ஆதிக்கத்தால் மண்ணில் வளம் குறைவதோடு ,உரங்களின் திறனும் போதுமான அளவு வெளிப்படுவதில்லை .ஏனெனில் மண் தன் சுய வளத்தைப் பாதிக்கும் மேல் இழந்து விட்டது. அவற்றின் உள் வாழும் நுண்ணுயிரிகள் 50 சதவீதத்திற்கும் கீழ்தான் தற்போது காணப்படுகிறது.

சில நகரங்களில் வாழும் மக்கள் மண்புழுக்களைக் கையில் தொடமாட்டார்கள், தொட்டால் தொழு நோய் அல்லது காச நோய் வந்துவிடும் என்ற தவறான கருத்தினைக் காலம் காலமாக ,தங்கள் சந்ததியினருக்குக் கடத்தி விடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உண்மையில் பழங்கால கிராமப் பெரியோர்கள் இதற்கு நேர்மாறான கருத்தையும், பயன்பாட்டையும் கொண்டிருந்தனர். குறிப்பாக, குயவர் போன்றோர் விஷக்கடி வைத்தியர்களாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் மதுரையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது, என் கல்லூரிக்கு அருகில் உள்ள கிராமமான பரம்புப்பட்டியில் இவ்வாறான பழக்க வழக்கங்கள் புழங்குவது கண்டு வியந்திருக்கிறேன். அங்கு உள்ள குயவர்கள் வரகு வைக்கோலை செம்மண்ணோடு பிசைந்து, அதன் மேல் பசுஞ்சாணப்பாலைக் கரைத்து, தெளித்துக் கொண்டே வருவார்கள். ஒரு வாரத்தில் அதில் மண்புழுக்கள் கூடு கட்டுவதைப் பார்க்கலாம். அம்மண் கட்டிகளைத் தாங்கள் மண்பானை செய்யும் மண்ணோடு அதிக அளவில் சேர்த்துப் பாண்டம் செய்வார்கள். அதில் நீர் ஊற்றித் தினசரி குடிப்பது மிகச்சிறந்த வைத்திய முறை. இது குறிப்பாக காச நோய் கட்டுக்கள் கொணரவும், நோய் எதிர்ப்புத் தன்மையை சிறு வயதிலிருந்து வளர்க்கவும் பேருதவி புரிவதாக அப்பெரியவர் கூறினார். மிகச் சிறந்த ஆண்டிபயாடிக்காக அந்த மண்பாண்ட நீர் செயல்படுகிறது. தற்போது தயாரிக்கப்படும் ஸ்டெரப்டோமைசின் போன்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகள் ,மண்புழுக்களின் வயிற்றுப் பகுதியிலுள்ள உயிரியான ஆக்டிளோமைசீட்டினிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது.



இப்புழுக்களால் உருவாக்கப்பட்ட மண்புழு உரம், மண்ணுக்கும், பயிருக்கும், சிறந்த எதிர்ப்பு சக்தியைக் கிடைக்கச் செய்வதால் ,பயிர்கள் ,பூச்சி, நோய்களைத் தாங்கி வளரும். அப்பயிர்களால் விளைவிக்கப்பட்ட உணவும், மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவது உறுதி. கரும்பு ,மக்காச் சோளம், நெல் போன்ற பயிர் வகைகளுக்கு, சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், லாரிகளில் பன்றி எருவை தருவித்து வயல் வெளிகளில் கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன் .கடுமையான நெடி உள்ள இது, களைகளை வளர விடாது என்பது அவர்களது கருத்து. சிலர், மண்புழு உரங்களையும், தெருவோரம் கொட்டிக் கிடக்கும் சாணக் குப்பைகளையும், கொழிஞ்சி, தக்கைப்பூண்டு போன்ற மடக்கி அடித்த செடிகளோடு கொட்டி ,நிலத்தை வளமாக்குவர். இவர்களது தோட்டத்தில் உள்ள பயிர்களின் இலைகள், கரும்பச்சை நிறத்திலும், பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். பன்றி, கோழி எரு தெளிக்கப்பட்டவை, வளமாக காணப்படினும், நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கும். ஏனெனில் இந்த எருக்கள் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை அல்ல.

கம்பம் பகுதி விவசாயிகள், வாழைக்கு டி.டி.பி. யூரியா, பொட்டாஷ் என வேதி உரங்கள் இட்டு அலுத்துப் போயினர். தற்போது திசு வாழை வந்து விட்டது. இவைகளாவது வேதி உரங்களைத் தாங்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். அதற்கு ஏற்றாற் போல், அவையும் 12 சீப் அடங்கிய தார் விட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காய்கள் பெருக்க, பெருக்க மரமானது மெலிந்து தூரோடு சாயத்துவங்கியது. இதனால் காய்களின் பெருக்கம் முற்றோடு தடைப்பட்டது. வேர் அழுகல் நோயால், வாழைக் கிழங்கு பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. தோண்டி ஆய்வு செய்தபோது ,கிழங்கில் வெள்ளை வேர்களைக் காணவில்லை. அவைதான் ஆதார சக்தி. அளவுக்கு மீறிய குருணை மருந்தும், ரசாயன உரமுமே இதற்குக் காரணம். அனுபவசாலிகள், இதை முன்பே கண்டறிந்ததால், நிலத்தை ஆழ உழுது கன்றுகளை நட்டு சொட்டு நீரும் ,மண்புழு உரமும், ஒரு சேர கொடுக்க 12 சீப் ,14 ஆகி ஆரோக்கியமான பெருத்த தாரை ஈன்றது. வருமானமும் ஈட்டித் தந்தது. சங்கரநாராயணன், என்ற அனுபவ விவசாயியின் வார்த்தையில் மண்புழு உரம், "பயிர்களுக்கு தாய்ப்பால் போன்றது". அமெரிக்காவில் கழிவுகளை நுண்ணுயிர் கொண்டு கூழாக்கி, பின் எருவாக்கி அதில் மண்புழு விட்டு உரம் தயாரிக்கிறார்கள். இதனால், 50 சதவீத விளைச்சல் அதிகரித்துவிட்டது என்கிறார்கள் ஹூஸ்டன் நகர விவசாயிகள்.

மண்புழுக்கள் அதிக உணர்ச்சி மிக்க பிராணி. அவற்றிற்க்கேற்ற சூழலை நாம் உருவாக்கித் தரும் போது மட்டுமே ,நாம் உருவாக்கிய பண்ணைகளில் வாழ்கிறது. உகந்த சூழல் இல்லை என்றால் இரவோடு இரவாக வெளியேறிவிடும். பகலில் ,துளை போட்டு ,உள்ளே வசித்து இரவில் மட்டுடே இரைதேடப் புறப்படும். ஈரமான மண் அமைப்பு தேவை .தன் உடலில் 80--100 கண்டங்களை உருளை வடிவில் கொண்டது. இதற்கு மெடாமெரிஸம் என்று பெயர். சிலவற்றிற்க்கு எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். வாய் பகுதி முதல் கண்டத்தில் உள்ளது. இது ,இருபால் உயிரி என்பதால், 14 கண்டத்தில் ஒரு ஜோடி பெண் புழைகளும், 18 வது கண்டத்தில் ஒரு ஜோடி ஆண் குறிகளும் உள்ளது. இதன் 6--8 வது கண்டப் பகுதியில் விந்துப் பைகள் காணப்படும். எல்லா கண்டப் பகுதியிலும், ஒரு வித நீட்சிகள் இருப்பதால், அதன் உதவியுடன் இதனால் இடம்பெயர முடிகிறது. இதன் கடைசி கண்டத்தில் மலத்துவாரம் உள்ளது. மண் புழுவிற்கு கண்கள் கிடையாது. மண்ணைத் தங்கள் பெயரில் அடையாளக் குறியாக இட்டுக் கொண்டாலும், அதனை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. மண்ணில் மக்கிய பொருட்களை மட்டுமே உட்கொள்கின்றன. சில நேரங்களில் 10---20 சதவீதம் மக்கிய பொருட்கள் அடங்கிய மண்ணை அரைத்து மீண்டும் சத்துள்ளவையாக வெளியேற்றிவிடும். இதன் எடையில், முழு அளவு உணவு உண்டு கால் அளவு எருவை வெளித் தள்ளுகின்றன. மனிதனோடு ஒப்பிடும்போது, தன் எடையில் 10 சதவீதம் மட்டுமே உணவாக உட்கொண்டு, 2---5 சதவீதம், கழிவாக வெளியேற்றுகிறான்! மண்புழு உரத்தில் கால்சியம், மாங்கனீஸ், தழைசத்து சாம்பல் சத்து போன்றவை பல மடங்கு அதிகம். ஆட்டு எரு, மாட்டெரு ,தொழு எரு போன்றவை அப்படியே பயிர்களுக்கு இடப்படும்போது, அவை மேற்சொன்ன சத்துகளைத் தருவதில்லை.

மிக முக்கியமாக மண்புழு உரம் தயாரிக்க மாட்டு எருவோ ,சாலைகளில் குவிக்கப்பட்டுள்ள தொழு எருவோ உபயோகிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ,பால்பண்ணை எருக்களை உபயோகித்தால், அதில் சத்து அதிகம். ஏனெனில், மாடுகள் பல்வேறுபட்ட புற்களை உண்கின்றன. அவற்றின் மிச்சம் ,கோமியத்தோடு கலந்திருக்கும். தவிர, புண்ணாக்கு ,பருத்திவிதை, கலப்புத் தீவனம், போன்றவையும், உண்ணப்பட்டு, செரிமானமாகி சாணமாக வெளியேற்றப்படுகிறது. இவைகளின், கூட்டுக் கலவையை மண்புழுக்கள் எருவாக்கினால், அவை மிகுந்த சத்துள்ளவையாக உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கிழட்டு மாடுகளின் செரியாமை காரணமாக ,அவை போடும் சாணங்களில் தீவனங்களின் சத்துகள் அரைகுறையாக அப்படியே வெளிப்படுவதால், அவைகளை அரைக்கும் மண்புழுக்களின் எரு, சத்துள்ளதாக உள்ளது என்பதும் ஆய்வின் அறிக்கையே. வெயிலில் காய்ந்த எருக்கள், மக்காத கழிவுகள், பூசாணம் பிடித்த எருக்கள் போன்றவற்றை மண்புழுக்கள் உண்ண நேரிட்டால், அவைகளின் இனப்பெருக்க தன்மை பாதிப்படைகிறது.



தற்போது, கால்வாய் ,குளங்களை ஆக்கிரமித்து வரும் ஆகாயத் தாமரை அதிக சத்துகள் கொண்ட ஒரு நீர்வாழ் தாவரம். இதனை சேகரித்து துண்டுகளாக்கி , மக்க வைத்து மண்புழுவிற்குத் தீவனமாக்கினால், அதிக சத்துகள் கொண்ட உரம் கிடைக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபித்து உள்ளார் டாக்டர் ஜேக்கப் செரியன், இவர் கேரள வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக இத்தாவரங்களே அதிகம் உதவுவதாகவும், இவற்றை உபயோகிப்பதால் உரம் கிடைப்பதோடன்றி கொசுத் தாக்குதலிலிருந்து மனிதனும், பிற ஜீவராசிகளும் தப்பிக்கலாம். "மண்புழுக்கான தீவனத்தில் பி.ஹெச். அளவு நடுநிலையோடு இருப்பது அவசியம். அதாவது பி.ஹெச். 7.0 .என் பண்ணையில் நான் அதிகளவு பழக்கழிவுகளை உணவாக இட அனைத்துப் புழுக்களும் இரவோடு இரவாக ஓடிவிட்டன. எஞ்சியவை உடலில் கொப்புளங்களோடு இறந்து கிடந்தன." இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆர். எஸ். நாராயணனிடம் கேட்ட போது பழங்களின் அமிலச் சத்து தீவனத்தின் பி.ஹெச். அளவைக் கூட்டியதே காரணம் என்றார். மண்புழுக்கள் மழை நீரை விரும்பிக் குடிக்கும். எனவே மழைக்காலங்களில் அவை வெளியே உலாவுகின்றன. சிறிதளவு உப்பு நீரிலும் அது உயிர் வாழாது. நன்னீரில் வாழும்போது மட்டுமே இவை இனப் பெருக்கம் செய்யும். முனிசிபல் கம்போஸ்ட் தரம் பிரிக்கப்பட்டு.,பூஞ்சாணங்கள் மூலம் எருவாக்கி பயிர்களுக்கு இடலாம். கண்மாய் ஏரிப்பகுதிகளில் படியும் வண்டல் மண், ஆகச்சிறந்த மினரல் சத்துகள் அடங்கியது. விலங்கினக் கழிவுகளை அடர்வு மிகுந்த அங்கக எருவாக மாற்றலாம். இவ்வாறான நடவடிக்கைகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். ஏனெனில் ,இங்குள்ள விவசாயிகள் இன்றும் ஏழையாகவே இருக்கிறான். அவன் வளமடைய இயற்கை வேளாண்மை ஒன்றே கைகொடுக்கும். அதற்குப் பிரதான பங்கு வகிக்கும் மண்புழு, என்ற அற்ப ஜீவிக்கே அந்த சக்தியை இயற்கை அளித்துள்ளது விந்தை!. இல்லையெனில், பெர்மா கல்சரின் தந்தை பில் மோலிசன் இதனை "மண்ணின் இதயம்" என அழைப்பாரா?
-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா 
Source:http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4029

மண்புழு பற்றிய பொதுவான கருத்து
மண்புழுவின் பயன்கள் 
மண்புழுவின் மகத்துவம்


No comments: