Wednesday

வீட்டுத் தோட்டங்கள்...

'வீட்டுத் தோட்டங்கள்...'
குடும்ப ஆரோக்கியத்துக்கு 100% உத்தரவாதம்!
'ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில்கூட அழகாக விவசாயம் செய்ய முடியும்’ என்பதை சமீபகாலமாக நகரவாசிகள் பலரும் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி.
''திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலரா வேலை செய்றேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனாலதான், வீட்டுலயே 1,500 சதுர அடியில தோட்டம் போட்டு இயற்கை முறையில, தக்காளி, கத்திரி, மிளகாய், பொன்னாங்கண்ணி, தண்டுகீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி...னு சாகுபடி செய்றேன். மாடியில தோட்டம் அமைக்கறதுங்குறது, இப்போ ரொம்ப சுலபமான விஷயமாகிடுச்சு.
இதுக்காகவே கடைகள்ல தனியா விக்கிற பைகளை வாங்கி, மண், மண்புழு உரத்தைக் கலந்து கொட்டி, செடிகளை வளக்க முடியும். தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, இந்தச் செடிகளை கவனிச்சா போதும். காய்கறி வாங்கறதுக்காக பையைத் தூக்கிட்டு அலையத் தேவையில்ல. செலவு, அலைச்சல் குறைவுங்கிறதைவிட விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கும் கறதுதான் முக்கியமான விஷயம்.
திண்டுக்கல் மாதிரி பகுதிகள்ல கோடையில வெயில் அதிகமா இருக்கும். அதனால, பசுமைக்குடில் அமைச்சு முள்ளங்கி, இஞ்சி விளைய வெக்கிறேன். மாடித் தோட்டத்துக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். 15 நாளைக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி மண்புழு உரம் தூவுவேன். ஒரு சாகுபடி முடிஞ்சதும், அடுத்த முறை அந்தப் பையில அதே பயிரைப் போடறதில்ல. வேற பயிரைத்தான் நடுவேன். அவ்வளவுதான் பராமரிப்பு. ஆனா, மாடித் தோட்டம் கொடுக்குற பலன் அளவில்லாதது. எங்க தேவைக்குப் போக மீதி காய்களை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம். எங்க காய்கறிகளை சாப்பிட்ட நண்பர்கள் சிலரும் அவங்க வீட்டுல தோட்டம் போட ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க'' என்ற சின்னசாமி நிறைவாக,
''எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தோட்டத்துக்குள்ள வந்துட்டாலே மன அழுத்தம் சுத்தமா குறைஞ்சுடும். சொட்டுநீர் இருந்தாலும், என்னோட பொண்ணு தினமும் அவ கையாலயே செடிகளுக்கு தண்ணி ஊத்தி வளக்குறதுல ரொம்ப சந்தோஷப் படுவா. மொத்தத்துல இந்தத் தோட்டம்... எங்க குடும்பத்தினரோட உடலுக்கு மட்டுமில்ல... மனசுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்திட்டிருக்கு'' என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார், செடிகளை வாஞ்சையாக தடவிக் கொடுத்தபடி!
தொடர்புக்கு, சின்னசாமி, 
செல்போன்: 97860-59130.



அரசு அலுவலகங்களில் கூரைத்தோட்டம்! 
வேகமெடுக்கும் புதுமுயற்சி!
தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் 'கூரைத்தோட்டம்' எனும் திட்டத்தை, முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.  
கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி, அவரை, பீட்ரூட், வெங்காயம், கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள்; வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள்; மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி, ஆகிய பூக்கள்; அகத்திக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரி¢சலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப் படுகிறது.
''மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடைகளிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். 'எங்களுக்கும் இதுபோல கூரைத்தோட்டம் அமைத்துக் கொடுங்கள்' என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்துக்கான வழியும் கிடைத்துள்ளது'' என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்.
  
சூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், ''சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரி¢க்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
விளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொருவரின் வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம்'' என்கிறார்.  
தொடர்புக்கு, பாலசுந்தரம், செல்போன்: 94433-50350
- தி. ஜெயப்பிரகாஷ்.
படங்கள்: அ. ஜெஃப்ரி தேவ்
மாடித் தோட்டம் உ. சிவராமன் படங்கள்: வீ. சிவக்குமார்
Source : pasumaivikatan

No comments: