Friday

40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...


40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...

ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
'பசுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே ஒரு நடைபோட்டோம்!  
 மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க’த்தின் தலைவர். 
''நாங்க இந்தளவு முன்னேறுனதுக்கு முக்கியமான காரணம் 'பசுமை விகடன்’தான். அதுல வர்ற கட்டுரைகளைப் பத்தி ஊருக்குள்ள நண்பர்கள்கிட்ட அடிக்கடி பேசுவேன். அப்படிப் பேசும்போதுதான், 'நாம ஒண்ணா சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யலாமே’னு எண்ணம் தோணுச்சு. அதுல உருவானதுதான் எங்க சங்கம்.
அதுக்கான வேலைகள்ல நாங்க இறங்கினப்பவே எங்களைப் பத்தி செய்தி வெளியிட்டு, எங்களை ஊக்கப்படுத்தினது பசுமை விகடன்தான். அதுக்கப்பறம் நிறைய பேர் எங்ககிட்ட பேச ஆரம்பிச்சாங்க. அதனால, எங்களுக்கான பொறுப்பு அதிகமாயிடுச்சு. அந்த ஊக்கத்துலதான் நாங்க இன்னமும் ஆர்வமா செயல்பட்டுக்கிட்டிருக்கோம். இப்போ எங்க சங்கத்துல 45 உறுப்பினர்கள் இருக்காங்க'' என்ற சிவலிங்கம் தங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.
ஆரம்பத்தில் அரை ஏக்கர்... இப்போது ஒன்றரை ஏக்கர்!
''ஆரம்பத்துல, குறைஞ்சபட்சம் அரை ஏக்கர்ல மட்டுமாவது இயற்கை முறையில சாகுபடி செய்யணும்னுதான் இறங்கினோம். ஆனா, இப்போ, ஒவ்வொருத்தரும் ஒன்றரை ஏக்கருக்கும் குறையாம இயற்கை முறையில சாகுபடி செய்யுறோம்.
ஒவ்வொரு வாரமும் ரெண்டு அல்லது மூணு தடவை காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளானு வெளிய அனுப்புறோம். எல்லாரும் கலந்து பேசி வெச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தரும் இன்னின்ன காய்னு பிரிச்சு வெச்சு சாகுபடி செய்றோம்.
பாகங்களாகப் பிரித்து சாகுபடி!
என்னோட நிலத்தை நாப்பது சென்ட் அளவுல தனித்தனி பாகமாப் பிரிச்சு வெச்சிருக்கேன். அதுல ஒரு பாகத்துல சுரைக்காய் போட்டிருந்தேன். இப்போ முழுசா அறுவடை முடிஞ்சிருச்சு. அது முடியும்போது அறுவடைக்கு வர்ற மாதிரி இன்னொரு பாகத்துல பாகல் போட்டிருந்தேன். இப்போ இதோட அறுவடை முடியற தறுவாயில இருக்கு. இதேபோலத்தான் புடலங்காய், பீன்ஸ்னு ஒவ்வொரு பாகத்துலயும் ஒவ்வொண்ணா பிரிச்சு பிரிச்சு போட்டிருக்கேன்.
வாரத்துக்கு 3,500 ரூபாய் லாபம்!
ஒவ்வொரு காய் அறுவடை முடியுறப்பயும் இன்னொரு காய் அறுவடைக்கு வந்துடும். சில சமயங்கள்ல ஒரே நேரத்துல ரெண்டு வகையான காய்களும் கிடைச்சுட்டு இருக்கும். சுரைக்காய்ல மட்டும் நாலு மாசத்தில் மொத்தமா 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுது. ஒரு காய்ல கிடைக்கற லாபத்தை வெச்சே, இன்னொரு காய்க்கு செலவு பண்ணிடலாம். ஒவ்வொரு காய்லயும் எல்லா செலவும் போக வாரத்துக்கு, சராசரியா 3 ஆயிரத்து 500 ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுட்டிருக்கு. இதேமாதிரி சுழற்சி முறையிலதான் எல்லாருமே சாகுபடி செய்றோம்.
இயற்கை இடுபொருட்கள்!
அடியுரமா தொழுவுரம்தான் போடுவோம். சுத்து வட்டாரத்துல எங்க கிடைச்சாலும், தொழுவுரத்தை வாங்கிட்டு வந்து இருப்பு வெச்சிடுவோம். தேவைப்பட்டா.... புங்கன்கொட்டை, ஆமணக்கு, வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்குனு ஏதாவது ஒண்ணை அதுல கலந்துக்குவோம். வளர்ச்சி ஊக்கியா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கொடுக்கிறோம். பூ உதிர்ந்தா... மோர், டிரைக்கோடெர்மா விரிடி ரெண்டையும் கலந்து தெளிப்போம். முட்டையோட வெள்ளைக்கரு, வேப்பெண்ணெய், காதி சோப்... இது மூணையும் கலந்தும் தெளிக்கலாம்.
அக்னி அஸ்திரத்துக்கு ஈடு இணை இல்லை!
காய்கறிச் செடிகள்ல பெரும்பாலும் அசுவிணி, பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகளோட தொல்லை அதிகமா இருக்கும். பொதுவா பூச்சிகள் வர்றதுக்கு முன்னாடியே ஐந்திலைக் கரைசலைத் தெளிச்சிடுவோம். இதைத் தெளிச்சிட்டா எந்தப் பூச்சியும் பக்கத்துலேயே வராது. அதையும் மீறி வர்றப்போ... அருவாமனைப் பூண்டுகளைப் பிடுங்கிட்டு வந்து அரைச்சு, சாறு எடுத்து 1:10 விகிதத்துல தண்ணியில கலந்து பயிர்கள்ல தெளிச்சுடுவோம். இதையெல்லாம் கடந்தும் பூச்சி பாதிப்பு இருந்தா, கடைசி ஆயுதம்... 'அக்னி அஸ்திரம்’தான். பாதிப்புக்கேத்த அளவுக்கு இதை அடிச்சி விட்டோம்னா... ஒரு பூச்சி, பொட்டு இருக்காது. இதுக்கு அடங்காத பூச்சிகளே இல்லைனுதான் சொல்லணும்'' என்ற சிவலிங்கத்தைத் தொடர்ந்தார் சங்கத்தின் செயலாளரான கொட்லுமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்.  
மாயம் செய்த பஞ்சகவ்யா!
''நான் 30 சென்ட்ல சுரைக்காய் போட்டிருந்தேன். விளைஞ்ச சமயத்துல காய்களைப் பாத்து கண் போடாத ஆளுங்களே இல்லை. ஏன்னா, என்னோட மண் நுரம்பு மண். இப்படிப்பட்ட மண்ணுல, இந்த அளவுக்கு விளைஞ்சதுக்கு காரணமே... பஞ்சகவ்யா மகிமைதான். இப்போ ரெண்டு ஏக்கர்ல தர்பூசணி போட்டிருக்கேன்.
உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாம் விலை ஏறுறதைப் பத்தி எங்களுக்கெல்லாம் கவலையே கிடையாது. ஆள் பிரச்னை மட்டும்தான் எங்களுக்கு ஒரே கவலை. ஆனாலும், நாங்களே ஓடியாடி உழைச்சு சரி பண்ணிக்கிறோம். அதுக்கேத்த மாதிரி எங்களுக்கு லாபமும் கிடைக்குது. எங்க கலெக்டரும், வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பாப்பிரெட்டிப்பட்டி கே.வி.கே. மையத்தினரும் நல்லா உதவி செய்றாங்க. அது எங்களுக்குக் கூடுதல் பலம்'' என்று நன்றி பெருக்கோடு சொன்னார்.
'தான் பெற்ற இன்பம்... பெறுக இவ்வையகம்' என்பதுபோல, தாங்கள் மட்டும் இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருக்காமல், அக்கம் பக்கமிருக்கும் விவசாயிகளுக்கும் அதன் பலன் சென்று சேரும் வகையில், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் செயல்பட்டுக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தொட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், இரண்டரை ஏக்கரை இயற்கை முறை சாகுபடிக்கு என ஒதுக்கி இருக்கிறார்.
தினந்தோறும் டீக்கடைகளில் அமர்ந்து இயற்கை விவசாயம் குறித்து ராஜேந்திரன் நடத்தும் பிரசங்கத்தால் கவரப்பட்ட ஆசிரியர் ஒருவர், தற்போது மெள்ள இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி தன் எட்டு ஏக்கர் நிலத்தையும் இயற்கையின் பக்கம் திருப்பி விட்டார். இவருடைய நிலத்தில் இயற்கை விவசாயத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, பெல்ட் அவரை என சாகுபடி செய்கிறார்.
இச்சங்கத்தினர் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒவ்வொருவரின் அனுபவத்தையும் அலசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு உறுப்பினரும் சந்தா தொகையாக நூறு ரூபாயை வழங்குகின்றனர். இப்படி சேரும் மொத்தத் தொகையை இவர்களுக்குள்ளாகவே குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர்.
'கூடி வாழ்ந்தால்... கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு உதாரணமாக நின்று கொண்டிருக்கும் அந்த விவசாயிகளைக் கை தொழுது விடைபெற்றோம்!
தொடர்புக்கு,
சிவலிங்கம்,
செல்போன்: 97875-45231.

எஸ்.ராஜாசெல்லம்
படங்கள் : க.தனசேகரன்
Source: pasumaivikatan

No comments: