Friday

உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்...வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி.

 உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்...
வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி...
''இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலயும் நான் கலந்துக்கிட்டது இல்லை. முழுக்க முழுக்க 'பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படிச்சுட்டு... விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கேன். வாழையை மட்டுமே தனிப்பயிரா சாகுபடி செய்துகிட்டிருந்தா நான், இப்ப ஊடுபயிரையும் சாகுபடி செஞ்சு கூடுதல் வருமானம் பாத்துக்கிட்டிருக்கேன்'' என்று சாதித்த திருப்தியோடு சொல்கிறார், திருப்பூர் மாவட்டம், வே. வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசிவமூர்த்தி.
 இரண்டு நாள் கணிப்பொறி... ஐந்து நாள் கழனி!
''கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, நண்பர்களோட சேர்ந்து திருப்பூர்ல சர்வீஸ் சென்டர் வெச்சிருக்கேன். வாரத்துல ரெண்டு நாள்தான் அந்த வேலை. மீதி அஞ்சு நாளும் விவசாயம்தான். பசுமை விகடன் புத்தகம் கைக்கு வந்ததுமே முழுசா படிச்சுடுவேன். மகசூல் கட்டுரைகள்ல வர்ற விவசாயிகள்கிட்ட உடனடியா பேசி, புதுப்புது விஷயங்களைத் தெரிஞ்சுக்குவேன். முடிஞ்சளவுக்கு அந்தத் தொழில்நுட்பங்களைக் கடைபிடிச்சுதான் வெள்ளாமை செய்றேன்.
உற்சாகம் கொடுத்த ஊடுபயிர் கட்டுரை!
பசுமை விகடன் 3-ம் ஆண்டு சிறப்பிதழ்ல ஜீரோ பட்ஜெட் சகோதரர்களோட பேட்டி வெளியாகியிருந்துச்சு. அது எனக்கு ரொம்ப உற்சாகம் கொடுத்த கட்டுரை. அதேமாதிரி, 2010 ஜனவரி 10-ம் தேதி இதழ்ல நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த போஸ் பத்தி வந்திருந்த செய்தியிலதான் வாழையில் உளுந்து, புடலை, தட்டை மாதிரியான ஊடுபயிர்களை சாகுபடி பண்ணலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதுவரைக்கும் வாழையை மட்டுமே தனியா சாகுபடி செஞ்சுக்கிட்டிருந்த நான் ஊடுபயிர் பக்கம் மாறுறதுக்கு காரணமே அந்தக் கட்டுரைதான்!
வெங்காய பூமி!
என்னோட நிலத்துல நல்ல தண்ணி வசதியும் இருக்கு. தென்னை, வாழை, வெங்காயம் மூணும் நல்லா வரும். தமிழ்நாட்டுல திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலயும், எங்க பகுதியிலயும்தான் பெரிய வெங்காயம் அதிகமா வெளையிது. ஆரம்பத்துல வெங்காயத்தை மட்டும்தான் சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தோம். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மஞ்சள், வாழைனு மாறியிருக்கோம்.
இப்போ, ஒண்ணரை ஏக்கர்ல நேந்திரன் வாழை போட்டிருக்கேன். அதுல ஊடுபயிரா நாட்டு ரக தட்டைப்பயறு இருக்கு. இப்போ அறுவடை நடந்துட்டிருக்கு. ஊடுபயிரா இதை சாகுபடி செய்யுறப்போ, களைகள் வர்றதில்லை. அதோட உயிர் மூடாக்காவும் பயன்படுது. இதோட இலைகள் மட்கி உரமாயிடுது. அறுவடை செஞ்சப்பறம் காய்ஞ்ச செடியை ஆடு, மாடுகளுக்கும் கொடுக்கலாம்'' என்ற ஞானசிவமூர்த்தி, சாகுபடிக் குறிப்புகளைச் சொல்லத் தொடங்கினார்.
மேட்டில் தட்டை, பள்ளத்தில் வாழை!
'நிலத்தை சரி செய்து, 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு, நாலரையடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு நீளமான மேட்டுப்பாத்திகளை வரிசையாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி விட வேண்டும். பாத்தி அமைக்கும்போது இந்த இடைவெளி பள்ளமாக இருப்பதால், இதை வாய்க்காலாகப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம்.
பிறகு, வாய்க்கால் மத்தியில் வாழைக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்போது வரிசைக்கு வரிசை ஆறடியும், மரத்துக்கு மரம் ஆறடியும் இடைவெளி இருக்கும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1200 கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். (இவர் 900 கன்றுகள் மட்டுமே நடவு செய்துள்ளார்.)
வாழைக்கன்றை நடவு செய்யும்போதே மேட்டுப்பாத்தியில் முக்கால் அடி இடைவெளியில் தட்டைப் பயறு விதைகளை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 12 கிலோ முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து, வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும்.
தட்டைப்பயறின் மகசூல் காலம் 60 முதல் 75 நாட்கள். 40 நாட்களில் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து அதிகாலை நேரத்தில் தோட்டம் முழுவதும் செழிம்பாக பனிப்புகை போலத் தெளிக்க வேண்டும். காய் பருவத்தில் பத்து லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் அக்னி அஸ்திரம் என்ற அளவில் கலந்து தெளித்தால், பச்சைப்புழுக்கள் தாக்குதல் இருக்காது. 75 நாட்களில் தட்டையை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்.
குறைவான அளவில் கோழி எரு!
தட்டைப்பயறு அறுவடை முடிந்த பிறகு மண்வெட்டியால் வாய்க்கால் வரப்புக்களை எடுத்துக்கட்டி, வாழை மரங்களுக்கு மண் அணைத்து விட வேண்டும். பிறகு, ஒரு டன் கோழி எருவைப் பாசனத் தண்ணீரில் கரைத்து விட்டு வரப்பு உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். கோழி எரு அதிகக் காரத்தன்மை கொண்டது என்பதால், அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. மரங்கள் வளர்ந்து நிழல் கட்டத் தொடங்கிய பிறகு களைகள் வளராது. 9-ம் மாதத்துக்கு மேல் பூவெடுக்கும். காய் பிடிக்கும் சமயத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 12-ம் மாதம் வாழைத்தார்களை அறுவடை செய்யலாம்’
சாகுபடிப் பாடத்தை முடித்த ஞானசிவமூர்த்தி, ''இப்போதான் பகுதி நிலத்துல தட்டைப்பயறு அறுவடை முடிஞ்சிருக்கு. 200 கிலோ வரைக்கும் மகசூல் கிடைச்சிருக்கு. மொத்தத்தையும் அறுவடை செஞ்சா 500 கிலோ அளவுக்கு கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். இப்போதைக்கு கிலோ 30 ரூபாய்க்கு விக்குது. இந்தக் கணக்குப்படி தட்டைப்பயறு மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
வாழை அறுவடை செய்யுறப்போ ஒரு தார் 200 ரூபாய்ன்ற விலைக்கு 900 தார்கள் மூலமா 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமா, 41 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். ஊடுபயிரா தட்டைப்பயறு போட்டதால களையெடுக்குற செலவு குறைஞ்சதோட, கூடுதல் வருமானமும் கிடைச்சுருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.  
தொடர்புக்கு,
சு. ஞானசிவமூர்த்தி,
செல்போன்: 98422-69257.
ஜி.பழனிச்சாமி
Source: pasumaivikatan

No comments: