Tuesday

தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

 தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம்- திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய செய்தி... கடந்த இரு இதழ்களில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.
திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் எஸ். சித்ராதேவி, ஆடுகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கினார்.
''ஆடுகளுக்கு நுண்ணுயிரிகளாலும், வைரஸ்களாலும்தான் அதிகமாக நோய்கள் வருகின்றன. இதில், நச்சுயிரி நோய்கள்தான் அதிக இழப்பை உண்டாக்குகின்றன.
ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்கும் அடைப்பான்!
நுண்ணுயிரி நோய்களில் முக்கியமானது அடைப்பான். இது 'பேசில்லஸ் ஆந்திராசிஸ்’ என்ற நுண்ணுயிரியால் வருது. இந்த நோய் தாக்கின ஆடுகளுக்கு காய்ச்சல் வந்து... திடீர்னு இறந்துடும். அப்படி இறந்த ஆடுகளோட மூக்கு, காது, ஆசனவாய் பகுதிகள்ல இருந்து உறையாத கருஞ்சிவப்பு ரத்தம் வெளியேறும். இது, முக்கியமான அறிகுறி.
அடைப்பான் தாக்கி இறந்த ஆடுகளை உணவுக்காகவோ, பிரேத பரிசோதனைக்காகவோ அறுக்கக்கூடாது. அப்படி அறுத்தா... நோய் கிருமிகள் காத்துல கலந்து பரவ ஆரம்பிச்சு, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட ஆபத்தா மாறிடும். அதனால, இந்த நோய் விஷயத்துல கவனமா இருக்கணும். இறந்த ஆடுகளை குழிவெட்டி சுண்ணாம்புத்தூள் போட்டு புதைச்சுடணும். இறந்து கிடந்த இடத்தை கிருமிநாசினி மூலமா சுத்தப்படுத்தி, அந்த இடத்தை தீயிட்டு கருக்கணும். அந்தப் பகுதியில இருக்கற மத்த ஆடுகளுக்கும் உடனடியா தடுப்பூசி போடணும். இந்த நோயை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால கட்டுப்படுத்திட முடியும்.
தொல்லை தரும் தொண்டை அடைப்பான்!
ஆடுகளோட தொண்டைப் பகுதியில 'பாஸ்ச்சுரல்லா மல்டோசியா’ங்கிற நுண்ணுயிரி எப்பவும் இருக்கும். உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இது பெருகி நோயை உண்டு பண்ணும். மழைக் காலத்தில் இளம் வெள்ளாடுகளுக்கு அதிகமா இந்த நோய் வரும். காய்ச்சல், மூச்சுத்திணறல், மார்பு, கழுத்து பகுதிகள்ல வீக்கம் மாதிரியான அறிகுறிகள் தென்படும். மூக்கு, வாயிலிருந்து சளி ஒழுகும். நோய் தாக்கின அஞ்சிலருந்து ஏழு நாட்களுக்குள்ள ஆடுகள் இறந்துடும். நோய் கண்ட ஆட்டை மந்தையிலிருந்து பிரிச்சுடணும். உடனடியா, கால்நடை மருத்துவர்கிட்ட கொண்டுபோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். மத்த ஆடுகளுக்கும் உடனே தடுப்பூசி போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன தடுப்பூசி போட்டு, இந்த நோய்ல இருந்து ஆடுங்களைக் காப்பாத்தலாம்.
துவள வைக்கும் துள்ளுமாரி!
'கிளாஸ்டிரீடியம் வெல்சை’ என்ற நுண்ணுயிரியால் ஏற்படுற நோய் துள்ளுமாரி. இது எல்லா வயது ஆடுகளையும் தாக்கும். அதிகமா இளம் ஆடுகளுக்கு வரும். மழைக் காலத்துல புதுசா முளைச்ச இளம்புற்களை மேயும்போது இந்த நோய் வருது. இந்த நோய்க்கிருமிகள் குடலில் எப்பவுமே தங்கி இருக்கும். திடீர்னு, அதிகமான தீவனம் எடுக்கும்போது, கிருமிகள் பெருகி, பாதிப்பு வருது. கிருமிகளோட விஷத்தன்மை நரம்பு மண்டலத்தைத் தாக்குறதால, ஆடுகள் துள்ளி விழுந்து இறந்துடும். சிலசமயங்கள்ல, சளி மாதிரி வயிற்றுப் போக்கு இருக்குற அறிகுறி தெரிஞ்சா.. மேய்ச்சல் நேரத்தைக் குறைச்சு, பாதி அளவுக்கு தீவனம் எடுக்குற மாதிரி பண்ணணும். உடனே மருத்துவர்கிட்ட காமிக்கணும்.
ஆடுகளுக்கு 6 மாச வயசுல இந்த நோய்க்கான தடுப்பு ஊசியைப் போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தடுப்பூசி போட்டுடணும். புதுசா முளைச்ச புல்லை எப்பவும் மேய விடக்கூடாது. தீவனத்தை திடீர்னு அதிகப்படுத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் கூட்டணும்.
கருச்சிதைவு கவனம்!
கருச்சிதைவு நோய், 'புரூசெல்லா மெலிடென்சிஸ்’ என்ற நுண்ணுயிரியால் பரவும். இனச்சேர்க்கை மூலமா பெட்டை ஆடுகளுக்குப் பரவும். இந்த நோய் தாக்குனா ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை வந்துடும். கருச்சிதைவு ஏற்படும். இந்த நோயோட அறிகுறிகள் தெளிவாத் தெரியாது. கருப்பையிலிருந்து ரத்தம் கலந்த சீழ் வெளியேறும். கிடாய்களுக்குத் தாக்கினா, விரைவீக்கம் இருக்கும்.
பாதிக்கப்பட்ட ஆடுகளோட ரத்தம், பால், நச்சுக்கொடி மூலமா மத்த ஆடுகளுக்கும் நோய் பரவும். சில சமயங்கள்ல மனிதர்களுக்கும் இந்த நோய் பரவி, 'மால்ட்டா காய்ச்சல்’ங்கிற நோயை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்ட ஆடுகளை மந்தையில இருந்து பிரிச்சுடணும். ரத்தப் பரிசோதனை செஞ்சு நோய் உறுதியாச்சுனா... அந்த ஆடுகளைக் கழிச்சுடணும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து வெளியேறிய ரத்தம், நச்சுக்கொடி எல்லாத்தையும் அப்புறப்படுத்தி, கொட்டிலை கிருமிநாசினியால சுத்தம் செய்யணும்.
லெப்டோ ஸ்பைரோஸிஸ்!
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் காய்ச்சல், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, ரத்தம் கலந்த சிறுநீர் மாதிரியான அறிகுறிகள் தென்படும். சிறுநீர் வழியே வெளியேறுகிற நோய்க்கிருமிகள் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் ரொம்ப நாட்களுக்குத் தங்கியிருக்கும். அது மூலமா, மத்த ஆடுகளுக்கும், மனிதர்களுக்கும்கூட இந்நோய் பரவும். அதனால் சதுப்பு நிலங்கள்ல ஆடுகளை மேய்க்காமல் இருக்கறது நல்லது. ஆரம்ப நிலையிலேயே நோய்க்கு சிகிச்சை கொடுத்து காப்பாத்திடலாம்.  
ஜோனிஸ்!
'மைக்கோ பாக்டீரியம் பேரா ட்யூபர்குளோசிஸ்’ என்ற நுண்கிருமியால் ஜோனிஸ் எனும் நோய் ஏற்படும். இந்தக் கிருமிகள் குட்டி ஆடுகளோட உடம்புக்குள்ள போய், ஆடு வளர்ந்த பிறகு நோயை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகள் மூலமா மனிதர்களுக்கும் பரவும்.
ஆடுகளோட குடல் பகுதியைத் தாக்கி நோய் உண்டாக்கறதால, தொடர்ந்து துர்நாற்றத்தோட வயிற்றுப்போக்கு இருக்கும். உடல் மெலிஞ்சுக்கிட்டே வரும். சில சமயங்களில் உடம்புல வீக்கம் இருக்கும். அப்படியே இருந்து இறந்துடும். இதை தடுப்பூசி மூலம் தடுத்திடலாம்.
குளம்பு அழுகல்!
'ப்யூசிபார்மிஸ் நோடோசஸ்’ என்ற நுண்கிருமியால் குளம்பு அழுகல் ஏற்படும். கொட்டகையில சகதி இருந்தா, கிருமிகள் பரவி ஆடுகளோட குளம்புப் பகுதியைத் தாக்கி புண் வரும். அந்த புண்கள்ல ஈக்கள் முட்டை வைக்கறதால புழுக்கள் உண்டாகும். அதனால ஆடுகள் நிக்க முடியாம மண்டி போட்டு மேயும். அதனால உடல் இளைச்சு ஆடுகள் இறந்துடும்.
கொட்டகையை சகதி இல்லாம காய்ஞ்ச நிலையில பராமரிக்கணும். ஆடுகளோட குளம்புல புழுக்கள் இருந்தா.. அதை நீக்கி 'டர்பன்டைன்’ எண்ணெயை பஞ்சில் நனைச்சு கட்டுப்போடணும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, கிருமிநாசினியைத் தடவணும். துத்தநாகக் கலவையை 5 முதல் 10 சதவிகிதம் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட கால்களை நனைக்கணும்.
ரண ஜன்னி!
'டெட்டனஸ்’ எனப்படும் ரண ஜன்னி நோய், 'கிளாஸ்டிரீடியம் டெட்டனி’ என்ற நுண்கிருமியால வருது. நிலத்தில் இருக்குற கிருமிகள்... காயங்கள் மூலமா உடம்புக்குள்ள புகுந்து நஞ்சை உண்டு பண்ணும். இந்த நஞ்சு ரத்தத்தில் கலந்தவுடன் நோயின் அறிகுறிகள் தென்படும். முதல்ல கால்கள் விரைக்கும். தசைகள்ல நடுக்கம் வரும். தலை ஒரு பக்கமாக திரும்பி, தாடைகள் இறுகிடும்.
வாயைத் திறக்க முடியாது. வாயிலிருந்து உமிழ்நீர் வடிஞ்சுக்கிட்டேயிருக்கும். மூச்சுவிட சிரமப்படும். மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் விடாது. நோய்கண்ட மூணுலருந்து... நாலு நாட்கள்ல ஆடு இறந்துடும். இந்த நோயைக் கட்டுப்படுத்த, ஆடுகளுக்கு முடிவெட்டும்போதோ, அல்லது காயடிக்கும் போதோ காயங்கள் வராமப் பாத்துக்கிடணும். ஏதாவது காயம் வந்தா, 'டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசி போடணும். காயத்தை சுத்தம் செஞ்சு மருந்து போடணும்.
நிமோனியா!
'கேப்ரைன் ப்ளூரோ நிமோனியா’ங்கிற இந்த நோய் 'மைக்கோபிளாஸ்மா’ங்கிற நுண்கிருமியால வருது. பாதிக்கப்பட்ட கால்நடைகள்ல இருந்து... தண்ணீர், தீவனம், காற்று மற்றும் மனிதன் மூலமாக மற்ற கால்நடைகளுக்கும் பரவும். நோய் கண்ட ஆடுகளோட உடல் வெப்பம் உயரும். மூக்கில் சளி கட்டி, மூச்சுவிட முடியாமல் இருமல் வரும். தீவனம் எடுக்காம இறந்துடும். நோய் கண்ட ஆடுகளைப் பிரிச்சு மருத்துவர்கிட்ட காட்டணும். சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தலாம்.'' என்று சொன்ன  சித்ராதேவி, வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விவரித்தார். அவை... அடுத்த இதழில்.

தொட்டால்சிணுங்கி ஆடை!
 வெயிலில் சென்றால் வியர்க்காத, ஆக்சிஜன் குறைந்த இடங்களில் உடலுக்கு தேவையான அளவு ஆக்சிஜனைக் கொடுக்கும் வகையிலான உயிரி ஆடை ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? என்று பலரும் யோசித்திருப்பார்கள்!
இதோ, அந்த ஆடை தயார் என்கிறார்... அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு முதுகலை இறுதியாண்டு மாணவர் பார்பூயியா. தொட்டாசிணுங்கி இலையுடன், நூலை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை... ஐரோப்பிய டிசைன் சங்கத்தின் 'சில்வர்’ விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது!
விளையாட்டின்போது அணிவதற்கும், மிக சிக்கலான காலநிலைகளின் போது அணிவதற்கும் இந்த ஆடை கைகொடுக்கும்!
ஆர். குமரேசன்
Source: pasumaivikatan 

1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238