Monday

கிராமம் காப்போம்

கிராமம்.. இனி வரப்போகும் நமது தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்ததே புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கின்றது.
பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும், ஆறுகளும், குளங்களும் ஏரிகளும் கால்நடை செல்வங்களும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மறைந்து போய் கொண்டு இருப்பது தெரியவில்லையா?
வெளிநாட்டு கழிவுகளை உரங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களில் கொட்டி அதன் வளத்தினை கெடுத்துவிட்டோம்,
நம் தேவைக்கேற்ப விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிவிட்டோம். இதனால் மேய்ச்சலுக்கும் வைக்கோலுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் கால்நடைகளை விற்றுவிட்டோம். இது போதாது என்று மத்திய அரசு வேறு மீத்தேன் எடுப்பு என்ற பெயரில் இருக்கும் விளை நிலங்களில் துளையிட்டு குழாய் பதித்து விளைச்சல் தன்மையை வீணடித்துக்கொண்டிருக்கின்றது.
குளம், ஏரி இவற்றில் உள்ள மண் முதல் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துவதற்காக இருந்த பெருங்கற்கள் முதல் சுரண்டி எடுத்து செலவில்லாமல் நம் வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தி விட்டோம்.
இருக்கும் மரங்களை வெட்டி விறகுக்காகவும் வீட்டின் தேவைக்காகவும் பணத்திற்காகவும் விற்று விட்டோம்.
திறந்த வெளிகளில் மலம் கழித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தொற்று நோய்களை பெருக்கிவிட்டோம்.
கிராமபுறங்களில் இருந்த கூட்டு குடும்ப முறையினை சிதைத்து இன்று குட்டி குடும்பமாக ஆக்கிவிட்டோம்.
நகரவாழ்க்கையை போல நமது தேவைக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியில் வர கற்றுக்கொண்டு கிராம வாழ்க்கை முறையை சிதைத்து விட்டோம்.
இதனால் நிகழப்போவது? என்ன உணவு பஞ்சம் உறவு பஞ்சம்.
இவற்றையெல்லாம் தடுத்து நமது இளைய தலைமுறைக்கு வரமாக இந்த அழகான கிராமப்புற வாழ்க்கையை மீட்டு விட்டு செல்ல வேண்டும். அவர்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை பெற்று நல்வாழ்வு வாழ்வேண்டுமல்லவா?
கூட்டு குடும்ப முறையினை ஊக்குவிப்பதன் மூலம் வருங்கால நமது சந்ததியருக்கு அன்பு, பாசம், அரவணைப்பு, தட்டிக்கொடுத்தல், விட்டுகொடுத்தல் போன்ற நல்ல பண்புகளை ஏற்படசெய்யலாம்.
செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் வயல்களில் இடுவதை அறவே தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நம் பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சிக்க வேண்டும்.
கால்நடைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பருவ மாற்றங்கள் ஏற்படும்போது தான் தொற்று நோய்கள் பரவி அவை இறப்புக்கு உள்ளாகின்றன. எனவே கால்நடை துறை விழிப்புணர்வு பிரச்சாரங்களை புறம்தள்ளாமல் சரியான சிகிச்சை முறைகளை கால் நடைகளுக்கு அளித்து பாதுகாக்க வேண்டும்.
தூர்வாரப்படாத கிராமப்புறங்களில் உள்ள குளம், வாய்க்கால், ஏரி, போன்றவைகளை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரலாம். இதனால் காலப்போக்கில் இவை அழிந்து போவதை தடுக்கலாம்.
ஒரு மரத்தினை வெட்டும்போது நிச்சயம் பத்து மரக்கன்றுகளை நட்டு அவற்றினை பராமரிக்கவேண்டும்.
திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை நிறுத்தி அரசு தரும் கழிவறை கட்டுவதற்கான மானியங்களை பெற்று வீட்டில் கழிவறைகளை கட்டி சுகாதாரமாக பயன்படுத்தலாம். நீங்கள் கிராமத்தினை பாதுகாக்க உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை தாருங்கள்.... கிராம வாழ்வு என்ற இயற்கை கொடுத்த வரத்தை தவறவிட்டுவிடாதீர்கள்.
Source: http://www.dinamani.com/specials/karuthuk_kalam/2014/02/24/

No comments: