Thursday

அயோடின் நன்மையையும் தீமையும்

'உங்கள் தட்டில் உணவா விஷமா..?’ 
அயோடின் உப்பு தொடர்பான செய்தி குறித்து, இரண்டு பேர் கடிதங்கள்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 'சீஸன் சால்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஆர்.கந்தசாமி, 'டேபிள்சால்ட் காரணமாக ஏற்படும் விளைவுகளால் இன்று பலர் மீண்டும் கல் உப்புக்கு மாறிக்கொண்டிருப்பது உண்மை. ஆனால், அரசு அனைத்து உப்பு உற்பத்தியாளர்களையும் உப்பில் அயோடின் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது.
தற்போதுள்ள 'எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.' (FSSAI-Food Safety and Standards Authority of India) சட்டம், உணவுக்கான உப்பில் அயோடின் சேர்க்காமல் விற்பதை தடைசெய்கிறது. சிகரெட்டை தடைசெய்ய முடியாத அரசு, அயோடின் சேர்க்காத உப்பை இவ்வளவு பிரயத்தனப்பட்டு தடைசெய்வது விந்தை. அயோடின் உப்பு காரணமாக நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எனவே, அதைத் தேவைப்படுபவர்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். அதற்காகவே நாங்கள் அயோடின் கலந்த உப்பை தயாரிக்கிறோம். அதேசமயம், அயோடின் சேர்க்காத உப்பும் சந்தையில் கிடைக்க வேண்டும். அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நுகர்வோர் கையில் இருக்க வேண்டும். கட்டாயத்தின் பெயரில் அயோடின் உப்பை வாங்கச் சொல்வது நல்லதல்ல'' என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மதுரையில் இயங்கும், 'மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனம்' எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிஷா, 'கடல் நீர் மற்றும் நாம் உண்ணும் உணவில் உள்ள அயோடின் அளவு மிகமிகக் குறைவு. கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளபடி ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான அயோடின் அளவு 15 மைக்ரோ கிராம் நாம் உண்ணும் உணவில் கிடைப்பதில்லை. எனவேதான் இந்த முக்கிய அத்தியாவசிய நுண்சத்து உப்பில் போதிய அளவு கலக்கப்பட்டு வழங்கப்படுகிறது. உப்பில் உள்ள அயோடின் உலகில் எங்குமே பிரித்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, உப்பில் தேவையான அளவு அயோடின் சேர்க்கப்படுகிறது.

மேலை நாடுகளில் 1920-களிலேயே இப்படி அயோடின் சேர்ப்பது துவங்கிவிட்டது. அந்நாடுகள், அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை வெற்றிகரமாக ஒழித்துவிட்டன. தெற்காசிய நாடுகளில்தான் அயோடின் குறைபாடு நோய்கள் மிக அதிகம். அதனால்தான் இந்திய அரசு, இக்குறைபாட்டை ஒழிக்க அயோடின் இல்லாமல் உப்பு விற்பனை செய்வதைத் தடைசெய்துள்ளது.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் அதிகம். இதற்கு முக்கியக் காரணம், போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இவ்வாறு தவறான தகவல்களை, அதிலும் மருத்துவர்களே பரப்புவது தமிழகத்தின் சாபக்கேடுஎன்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு கடிதங்களையும் கட்டுரை ஆசிரியர் டாக்டர் சௌந்தரபாண்டியன் முன்பாக வைத்தபோது... ''அயோடின் உப்பு பற்றி மேலும் சில விளக்கங்களை வாசகிகளுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக இவர்களுக்கு நன்றி'' என்று சிரித்தபடியே சொன்ன டாக்டர், நீண்ட விளக்கத்தையும் தந்தார்!
''முதலில் அயோடின் பற்றிய சில அடிப்படை உண்மைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அயோடின் பூர்விகம் கடல் நீர்தான். கடலில் வாழும் மீன்கள், கடலில் விளையும் தாவரங்களான கடல் பாசிகள், கடல் நீரில் எடுக்கும் உப்பு, கடலோரப் பகுதிகளில் விளையும் தாவரங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு. கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி அமைந்திருக்கும் பிரதேசங்களின் நிலத்தில் அயோடின் குறைவு. ஆகவே, அந்தப் பகுதி தாவரங்களிலும் அயோடின் குறைவு. அயோடின் குறைபாட்டால் விளையும் தைராய்டு பிரச்னையும் இந்த அடிப்படையில்தான்.
உலகில் உள்ள 254 நாடுகளில், தற்போது வெறும் 32 நாடுகளில்தான் அயோடின் குறைபாடு உள்ளது. உலகின் ஜனத்தொகையில் வெறும் 2 சதவிகிதம் பேருக்கே தைராய்டு பிரச்னை. நம் நாட்டில் 125 கோடி பேரில் 6 கோடி பேருக்குத்தான் தைராய்டு குறைபாடு உள்ளது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்த 2 சதவிகித மக்களுக்காக, மீதம் உள்ள 98 சதவிகித மக்களைப் பலிகடா ஆக்குவது என்ன நியாயம்? உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அயோடின் குறை பாடுள்ள நாடுகளின் 'டாப் - 10’ பட்டியலில் இந்தியா இல்லை என்பது உண்மை.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பலர் மந்தமாகவும், பருத்தும், தைராய்டு வீக்கத்தோடும் இருப்பதைக் கவனித்த ராணுவ அதிகாரிகள், அவர்களுக்கு உணவில் அயோடின் குறைபாடு இருப்பதை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தார்கள். அப்போதுதான் 1924-ல் அயோடின் கலந்த உப்பு உபயோகத்துக்கு வந்தது. அந்தப் பகுதி மக்களுக்கு தைராய்டு பிரச்னை தீர்ந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் பலர் அயோடின் மிகுதியால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வியாதிகளால் அதிக எண்ணிக்கையில் மடிந்தனர் என்பது மருத்துவ சரித்திரம்.
''சகோதரி நிஷா, 'கடல் நீரிலிருந்து அயோடினை உலகில் எங்குமே பிரிப்பதில்லை. நம் உணவில் போதிய அளவு அயோடின் கிடைப்பதில்லை' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால், கடல் நீரிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உப்பில் சோடியம், அயோடின் உள்ளிட்ட 84 ஊட்டச்சத்துக்களில் சோடியத்தைத் தவிர, மீதி 83 சத்துக்களையும் அறவே நீக்கிவிட்டு, ரொம்ப கரிசனத்துடன் அயோடின் மட்டும் சேர்க்கிறார்கள். ஏன் சோடியத்தை மட்டும் நீக்கவில்லை... ஏன் அயோடினை மட்டும் சேர்க்கிறார்கள்..
பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பி.வி.சி தொழிற்சாலைகள், காகிதக்கூழ் தொழிற்சாலைகள், குளோரின் தயாரிப்பு, உணவுப் பதனிடும் தொழில்கள் - எல்லாவற்றுக்கும் சுத்தமான சோடியம் குளோரைடு தேவை. இதற்காக ஒட்டுமொத்த உப்பையும் 'பிளீச்செய்து, சோடியம் குளோரைடு தவிர அதில் உள்ள 83 சத்துக்களையும் அறவே நீக்குகிறார்கள். 94 பங்கு உப்பை (சோடியம் குளோரைடு) தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கிறார்கள். மீதி உள்ள 6 பங்கு உப்பில் மீண்டும் அயோடின் சேர்த்து, உங்கள் தட்டில் கொட்டுகிறார்கள். உப்பளங்களில் கிடைக்கும் இயற்கை உப்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகித்து வந்தவேளையில், அதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று ஆரம்பித்தது இதற்காகத்தான். இதற்குப் பிறகுதான், அயோடின் குறைபாடு பற்றிய பிரச்னைகள் எழ, உப்புத் தொழிற்சாலைகள் இப்படி அவசர அவசரமாக அயோடினை உப்பில் கலந்து, விலையையும் 10 மடங்கு ஏற்றினர்.
சரி, அயோடின் உப்பு உண்மையில் பிரச்னைகளைத் தீர்த்ததா? அதுவும் இல்லை. இயற்கை உப்பில் இருக்கும் அயோடின் ஸ்திரமானது - கரையாது. ஆனால், உப்பில் கலக்கும் செயற்கை அயோடின் ஸ்திரமற்றது. உப்பு பாக்கெட்டைத் திறந்த ஒரு மாதத்துக்குள் அத்தனை அயோடினும் ஆவியாகிவிடும். இப்படி ஆவியாகிவிடலாம் என்ற பயத்தில், தேவைக்கு மேல் பல மடங்கு அதிகமாகக் கலக்கிறார்கள். இதைத் தடுக்க அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் உண்டு. இங்கே? அதுமட்டுமல்ல, அயோடின் உப்பை அறிமுகம் செய்த அமெரிக்காவிலேயே, 'அயோடின் உப்பு கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்' என்று சட்டம் கிடையாது.
அளவுக்கதிகமாக அயோடின் கலப்பதும், அயோடின் மிகுதி வியாதிகளுக்கு ஒரு காரணம். இவற்றில் 'ஹாஷிமேட்டோஸ்என்ற ஆட்டோ - இம்யூன் வியாதி முக்கியமானது. இது, இப்போது உலகெங்கும் பெருகி வருகிறது. அயோடின் வேலை செய்வதற்கு 'செலீனியம்என்ற தாதுப் பொருளும் தேவை. கடல் உப்பில் செலீனியம் உண்டு... அயோடின் உப்பில் இல்லை. செலீனியம் இல்லாத உப்புதான், இந்த வியாதிக்குக் காரணம்.
கல் உப்பு, கடல் நீரில் எடுக்கப்படுகிறது. 'டேபிள் சால்ட்என்பதன் மூலம்... கடல் மட்டுமல்ல. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் மிஞ்சும் கழிவுகளிலிருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்பட்டு, பாலிஷ் போட்டு பளபளப்பாக்குகிறார்கள். ஆக, நாம் உபயோகிக்கும் 'டேபிள் சால்ட்’, கடல் உப்பா, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்புக் கழிவா என்பதை நுகர்வோர் அறிவதற்கில்லை’' என்று அதிர்ச்சியைக் கூட்டிய டாக்டர்
''தூத்துக்குடி டி.ஆர்.கந்தசாமி சொல்வதுபோல, என்ன சாப்பிட வேண்டும் எனும் உரிமை ஒவ்வொரு மனிதனைச் சார்ந்தது. அயோடின் வேண்டுமா... வேண்டாமா என்பதை மக்களிடமே விட்டுவிட வேண்டும். ஆம், தேவைஇருப்பவர்கள்தான் மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், அனைவரையுமே சாப்பிடச் சொல்வது ஆபத்தானதுதானே!'' என்ற கேள்வியை முன் வைத்து முடித்தார்!
அன்றாட உணவில் அயோடின்!
உண்மையில், நம் அன்றாட உணவில் அயோடின் தாராளமாகக் கிடைக்கிறது. கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள். இவற்றைஎªல்லாம் அன்றாட உணவில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தாலே... அயோடின் பற்றாக்குறை தானே ஓடிவிடும்
மீன் 2 துண்டு - 35 மை.கி
 முட்டை 1 - 12 மை.கி
 பால் 1 கப் - 56 மை.கி
 உருளைக்கிழங்கு 1 - 60 மை.கி
 பீன்ஸ் 1/2 கப் - 32 மை.கி
 வாழைப்பழம் 1 - 3 மை.கி
 அயோடின் உப்பு 1 கிராம் - 77 மை.கி
 கடல் உப்பு 1 கிராம் - 30 மை.கி
 கடல் பாசி 1/4 அவுன்ஸ்-4500 மை.கி

நம் ஊர் கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கீரை வகைகள், பழங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு.

Source: www.vikatan.com

No comments: