Wednesday

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...
அசத்தும் அரசுப் பண்ணை!

விதைப்பைவிட, நடவு முறையைத்தான் பெரும்பாலான பயிர்களுக்கும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். விதைப்பு முறையில் அனைத்து விதைகளுமே முளைத்து வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதோடு, முளைத்து வருவதற்கும் நாட்கள் பிடிக்கும். இதுபோன்ற காரணங்கள்தான், விவசாயிகளை நடவு முறை நோக்கி ஈர்க்கிறது. குறிப்பாக, மரம் வளர்ப்பில் அனைவருமே நாற்றுகள் அல்லது கன்றுகளைத்தான் நடவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக, குறைந்த விலையில் தரமான கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை.

மரம் வளர்ப்பு மற்றும் மேலாண்மைச் சிறப்பிதழுக்காக காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் (பொறுப்பு) அமானுல்லாஹ்விடம் பேசினோம்.

'தமிழ்நாடு முழுவதும் 54 தோட்டக்கலைப் பண்ணைகள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை, நில அமைப்பு, பயிர் செய்பவர்களின் தேவையைப் பொறுத்து பண்ணைகளில் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் பழமரக்கன்றுகள், மலர்ச்செடிகள், பல வகையான மரக்கன்றுகள், வாசனைச் செடிகள் சார்ந்த அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியிடப்படும் ரகங்கள், அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள், அந்தந்தப் பகுதிகளுக்குத் தேவையான ரகங்கள் எனப் பல ரகங்களை விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை இப்பண்ணைகள் மூலம் செய்கிறோம். தனியார் நர்சரிகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் கன்றுகளுக்கு முழு உத்தரவாதம் கிடையாது. ஆனால், எங்கள் கன்றுகள் நிச்சயம் தரமானவையாக இருக்கும்'' என்று சொன்னவர், உதவி இயக்குநர் ராணியை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்த ராணி, ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல் கதிர்ப்பூர், பிச்சந்தாங்கல், பிச்சிவாக்கம், ஆத்தூர் ஆகிய 4 இடங்களில் தோட்டக்கலைப் பண்ணைகள் இருக்கின்றன. இதில் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள 'ஆத்தூர் தோட்டக்கலைப் பண்ணை’யில் அரசு திட்டங்களின் கீழும், நேரடியாகவும் கன்றுகளை வழங்கி வருகிறோம். இங்கே குறைந்த விலையிலும் கன்றுகள் விற்பனைக்குக் கிடைக்கும்.
இப்பண்ணை 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இப்பண்ணையில் ஆண்டுக்கு 3 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதோடு, திருவள்ளூர் மாவட்டத்துக்கும் அரசுத் திட்டங்களுக்காக கன்றுகளை வழங்குகிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்தத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 50% மானியத்தில் 1 ஹெக்டேர் வரை இத்திட்டத்தின் கீழ் கன்றுகள் வழங்கப்படுகிறது. இதோடு பண்ணை மகளிர் மேம்பாட்டுத் திட்டம், வாலாஜாபாத், சித்தாமூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டங்களின் கீழ் பழமரக் கன்றுகள், மலர்ச்செடிகள் பெற விரும்புவோர் அந்தந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தோடு சேர்ந்து இயங்கி வரும் தோட்டக்கலை உதவி அலுவலரை அணுகலாம். இதேபோல, தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் 4 ஹெக்டேர் அளவு நிலத்தில் நடவு செய்ய வரை கன்றுகளைப் பெறலாம். இத்திட்டம், தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சம்பந்தபட்ட தோட்டக்கலை உதவி அலுவலர்களை அணுகிப் பயன்பெறலாம்'' என்று வழிகாட்டினார்.
ஆத்தூர் தோட்டக்கலைப் பண்ணையின் உதவி மேலாளர் நவீன், ''பொதுவாக செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை, மர நடவு சீசன் என்பதால், கன்றுகள் விற்பனை அதிகளவில் இருக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் முடிய கன்றுகள் உற்பத்தி நடக்கும். அந்த சமயங்களில் கன்றுகள் குறைந்தளவில்தான் கிடைக்கும்.
விதை, குச்சி நடவு, ஒட்டுச்செடி, பதியன் என்கிற முறைகளில் கன்றுகளை உற்பத்தி செய்கிறோம். கன்றுகள் உற்பத்திக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலா ஒரு பங்கு மணல், செம்மண், தொழுவுரம் (உயிர் உரங்கள் கலந்தது) கலந்த மண்கலவையை கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் தொட்டியில் கொட்டி உற்பத்தி செய்வோம். இதைத்தான் தாய் மண் என்று சொல்வார்கள். செடி வைக்கும்போதும் இந்த தாய்மண்ணோடு சேர்த்து செடிகளை நடவு செய்ய வேண்டும். கன்று விற்பனை மட்டுமல்லாமல், நடவு, பராமரிப்புக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்'' என்றார்.
த. ஜெயகுமார் படங்கள்: பா. அருண்
Source: pasumai vikatan

No comments: