Monday

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்... மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்...
கொத்தமல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக... தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார்!
தன்னுடைய வயலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜை சந்தித்தபோது, அன்போடு வரவேற்று... ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தவர், ''எனக்கு மூணு ஏக்கர் இருக்கு. மொத்தமும் செம்மண் பூமிங்கிறதால, போட்டது விளையும். பாசனம் கொஞ்சம் பத்தாக்குறைதான். ஆயிரம் அடிக்கு போர்வெல் போட்டும் 'ஆடு கறக்க... பூனை குடிக்குற கதை’யாத்தான் தண்ணி கிடைக்குது. வழக்கமா மிளகாய், பொரியல் தட்டை, வெங்காயம், கீரை, காய்கறிதான் சாகுபடி பண்ணுவோம். ஆனா, இதுங்கள மூணு ஏக்கர்லயும் முழுசா பயிர் பண்ண முடியாது. காரணம்... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம்தான் பி.ஏ.பி. (பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம்) தண்ணி கிடைக்கும். அப்ப மட்டும்தான் மூணு ஏக்கர்லயும் முழுசா வெள்ளாமை செய்ய முடியும்.
நஞ்சையான புஞ்சை!
வழக்கமா என்னோட நஞ்சைநிலத்துல மட்டும் கொத்தமல்லி கீரையை சாகுபடி செய்வேன். இந்தத் தடவை மானாவாரி நிலத்தை குத்தகைக்கு பிடிச்சு, அதுல விதைச்சுருக்கேன். என்னோட தோட்டத்துக்குப் பக்கத்துல ஏக்கர் கணக்குல காலி நிலங்கள் கிடக்கு. நல்ல மழை கிடச்சா மட்டும்தான், அதுல சோளம், கம்புனு எதையாவது விதைப்பாங்க. மத்தபடி, ஆடு, மாடுகதான் மேய்ஞ்சுட்டுக் கிடக்கும். அதனால அதுகளோட எரு மொத்தமும் அந்த இடத்துலயே மண்டி, நிலமும் வளமா இருந்துச்சு. அந்த மண்ணுல பாரம்பரிய விவசாய முறையில கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம்னு தோணவே... ரெண்டு ஏக்கரை குத்தகைக்குப் பிடிச்சு, என் தோட்டத்துல இருந்து குழாய் மூலமா தண்ணி எடுத்துட்டுப் போயி அதுலதான், இந்த முறை கொத்தமல்லி சாகுபடி செய்திருக்கேன். அரை, ஏக்கர் நிலத்துலதான் கொத்தமல்லியை விதைப்பேன். ஒரு பக்கம் அறுவடை நடக்கும்போது, அடுத்த அரை ஏக்கர்ல கொத்தமல்லியை விதைச்சுடுவேன். இப்படி சுழற்சியா கொத்தமல்லி சாகுபடி செய்றதுதான் என்னோட பழக்கம். குத்தகை நிலத்துலயும் அதையேதான் செய்துகிட்டிருக்கேன்.
கோழி எருவை மட்க வெச்சுதான் கொட்டணும்!
கலப்பையே படாம இருந்த அந்த நிலத்துல, புழுதி கிளம்ப கோடை உழவு பண்ணி ஆறப்போட்டுத்தான் வெள்ளாமை பண்ணிருக்கேன். ஆரம்பத்துல அரை ஏக்கர் நிலத்தை மட்டும் சரி செஞ்சு, ஆரம்பிச்சேன். நாட்டுக்கோழிப் பண்ணை வெச்சுருக்கேன். அதுல இருந்து 5 டன் கோழி எருவையும் கொண்டு வந்து போட்டதுல பயிர் நல்லா வந்துருக்கு. கோழி எரு போடறப்போ கொஞ்சம் கவனமா இருக்கணும். அதுல, காரத்தன்மை அதிகமா இருக்கும். அதனால, காத்தோட்டமான இடத்துல குவியலா கொட்டி வெச்சி,
45 நாள் ஆன பிறகுதான் அதை வயல்ல போடணும். இல்லேனா... பயிர்களோட வேரை அது பாதிச்சுடும்'' என்றவர், கொத்தமல்லி சாகுபடி முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
45 நாளில் வருமானம்!
மணல் கலந்த செம்மண் பூமியில், கொத்தமல்லி அருமையாக விளையும். இதன் வயது 45 நாட்கள். நிலத்தை 'பொலபொல’வென உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது, 5 டன் கோழி எருவை அடியுரமாக இட்டு, இரண்டு முறை உழ வேண்டும். பிறகு, இட வசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் சிறுசிறு மண்கட்டிகள், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மண்ணை சமன் செய்து விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைக்கும்போது ஓரிடத்தில் அதிகமாகவும் இன்னோரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், முளைப்பு சீராக இருக்காது. அதனால், கவனமாக விதைத்து, பாத்திகளில் உள்ள விதைகளை மண் மூடும்படி, குச்சி கொண்டு கீறி, மண் நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வாரம் ஒரு பாசனம்!
விதைத்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்த 8-ம் நாளில் இருந்து
10 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். 20-ம் நாளில் களை எடுத்து, பயிர் வளர்ச்சி ஊக்கியாக 25 கிலோ தழை-மணி-சாம்பல் சத்துக்கொண்ட உரத்தை பாசன நீரில் கரைத்துவிட வேண்டும் (இவர், கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் உரத்தைப் பயன்படுத்துகிறார்).
30-ம் நாளில் செடிகள் 'தளதள’வென வளர்ந்து பச்சைக்கட்டி நிற்கும். அதன் வாசமும் நிறமும் பூச்சிகளை ஈர்க்கும். அசுவிணி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக வந்து செடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.
உடனடி விற்பனை!
45-ம் நாளில் செடிகள் பாத்தி தெரியாத அளவுக்கு வளர்ந்து நிற்கும். இதுதான் அறுவடை தருணம். அளவான ஈரத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி, இரண்டு கைப்பிடி அளவுக்கு வைத்து வாழை நார் கொண்டு கட்டுகளாகக் கட்டி... வேர்ப்பகுதியை மட்டும் தண்ணீரில் அலசி, வேர்களில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
நிழலான இடத்தில் வரிசையாக கட்டுகளை அடுக்கி வைத்து, ஈரத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தழைகள் வாடி உதிர்ந்து போகாமல் இருக்கும். கொத்தமல்லி, விரைவில் வாடிப்போகும் என்பதால், அறுவடை செய்த உடனே விற்று விடுவது நல்லது''
அரை ஏக்கரில் 30 ஆயிரம்!
சாகுபடி பாடம் முடித்த கனகராஜ், ''கொத்தமல்லியைப் பொறுத்த மட்டும் எப்பவும் கிராக்கி இருந்துக்கிட்டே இருக்கும். அறுவடைக்கு நாலு நாளைக்கு முன்னயே யாவாரிக வந்து பாத்திகளை கணக்குப் போட்டு முன்பணம் கொடுப்பாங்க. அதுக்காக அவங்கள மட்டுமே நம்ப வேண்டியதில்லை. உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்னு நாமளே நேர்ல கொண்டு போயும் விக்கலாம்.
நான், இந்த அரை ஏக்கர்ல 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கும்னு கணக்குப் போட்டு, கிலோ 12 ரூபாய்னு விலை பேசி யாவாரிகிட்ட வித்துட்டேன். இதன் மூலமா 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. மொத்த செலவு 12 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபம்... அதுவும் 45 நாள்ல'' என்று விற்பனை, வருமானம் மற்றும் லாபக் கணக்குகளைச் சொன்னார் சந்தோஷம் பொங்க!

பண்டிகைப் பயிர்!
கனகராஜிடம் முன்பணம் கொடுத்து கொத்தமல்லியை வாங்கியிருக்கும் வியாபாரி சண்முகம், ''அதிக மழையும், அதிக வெயிலும் மல்லித்தழைக்கு ஆகாது. மழையில இத்துப் போயிடும், வெயில்ல கருகிடும். இதை மனசுல வெச்சுத்தான் பல விவசாயிக, தென்னந்தோப்புகள்ல கிடைக்குற நிழல்ல மல்லியை பயிர் செய்றாங்க. அதனால, இந்தப் பகுதியில வருஷமெல்லாம் மல்லி இருக்கும். முழுக்க, முழுக்க கேரளா மார்க்கெட்டை நம்பித்தான் பொழப்பு ஓடுது. கிறிஸ்துமஸ், ஓணம், விஷூ மாதிரியான பண்டிகைகளை கேரளாவுல விசேஷமா கொண்டாடுவாங்க. அந்த சமயங்கள்ல மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும். இதுமாதிரியான காலங்கள மனசுல வெச்சு சாகுபடி செஞ்சா... கிலோவுக்கு அதிக பட்சமா 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்'' என்று ஆலோசனைகளையும் சேர்த்தே சொன்னார்!
தொடர்புக்கு,
கனகராஜ்,செல்போன்: 98427-07280.

Source: pasumaivikatan


No comments: