Friday

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையம்


உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையம் !

மகசூல்
காசி.வேம்பையன்
2 ஏக்கர் காய்கறி = 25 ஏக்கர் நெல்
உற்சாக வருமானம் தரும், ஒருங்கிணைந்த (இயற்கை) பண்ணையம் !

மேட்டுப்பாத்தியில் காய்கறி வளர்ப்பு...

எப்போதும் ஒரே விலை.
ஆடு,மாடு, கோழி, மீன் வளர்ப்பிலும் லாபம்


காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடினாலும், ஓடாவிட்டாலும்... டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், நெல் சாகுபடி செய்வதில்தான் கவனம் காட்டுவார்கள்.
வெகு சிலர்தான் காய்கறி, பயறு வகை என மாற்றுப் பயிர்களைப் பற்றி யோசிப்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் ஒரு படி மேலே போய், இத்துடன் கால்நடைகளையும் இணைத்துக்கொண்டு லாபம் ஈட்டுவார்கள். இத்தகைய வெகுசிலரில் ஒருவர்... நாகப்பட்டினம் மாவட்டம், நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்.
நெல்லோடு மட்டும் தனது விவசாயத்துக்கு அணை போட்டு விடாமல்... ஆடு, கோழி, கறவை மாடு, மீன் என கால்நடைகளோடு காய்கறி சாகுபடியையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்திருப்பதோடு, நேரடி காய்கறி விற்பனையிலும் கலக்கி வருகிறார் ஜீவானந்தம். காலைவேளையில் தோட்ட வேலைகளில் மும்முரமாக இருந்தவரைச் சந்தித்தோம்.
''பனிரெண்டாவது படிச்சு முடிச்சவுடனேயே விவசாயத்துக்கு வந்துட்டேன். இப்போ பதினஞ்சு வருஷம் ஆச்சு. பத்து வருஷத்துக்கு முன்ன பருத்திச் சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தப்போ, 'வெங்கடேசன்'ற ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியோட பழக்கம் கிடைச்சுது. அவர்தான் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றா, இயற்கை முறையில காராமணி நடவு, வேப்பங்கொட்டைக் கரைசல்னு சொல்லிக் கொடுத்தார். அந்த முறையில பருத்தியில நல்ல பலன் கிடைக்கவும்... அதையேதான் எல்லாப் பயிர்களுக்கும் பூச்சிக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்துறேன்.
மிரட்டும் மேட்டுப்பாத்தி..!
இந்தப் பகுதியில விவசாயம்னாலே நெல்தான். அதனால நானும் 25 ஏக்கர்ல வருஷத்துக்கு ஒரு போகம் நெல் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கேன். இது தண்ணி தேங்குற பகுதிங்கறதால, பெரும்பாலும் நெல்தான் சாகுபடி பண்ண முடியும். மழை இல்லாத காலங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா மண்ணைக் கொட்டிக் கொட்டி ரெண்டு ஏக்கரை மேட்டுப்பகுதியா மாத்தியிருக்கேன். அதுலதான் 10 சென்ட்ல பாகல், 10 சென்ட்ல புடலை,
10 சென்ட்ல கொத்தவரை,
50 சென்ட்ல கத்திரி, 50 சென்ட்ல தக்காளி, 50 சென்ட்ல மிளகாய்னு காய்கறிகளை சாகுபடி பண்றேன். 10 சென்ட்ல பசுமைக்குடில் அமைச்சு காய்கறிகளுக்கான நாத்தையும் நானே தயார் பண்ணிக்கிறேன்.
இதுபோக, ஒண்ணரை ஏக்கர் குளத்துல மீன்; அரை ஏக்கர் குளத்துல மீன் குஞ்சு வளர்ப்பு; ஒரு ஏக்கர்ல ஆடு, கோழி, மாடுனு தனித்தனியா இருக்கு" என்று தனது பண்ணையைப் பற்றி ஜீவானந்தம் சொல்லிக் கொண்டே போக... பிரமிப்பின் உச்சிக்கே சென்றோம் நாம்!
25 ஏக்கர் நெல்லை மிஞ்சும் 2 ஏக்கர் காய்கறி வருமானம்!
தொடர்ந்து பேசிய ஜீவானந்தம், ''99ம் வருஷத்துல மெஷின் நடவுக்காக நாத்து பாவி வெச்சுருந்தேன். ஆனா, நாத்து முத்தியும் மெஷின் கிடைக்காம ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அதனால, நானே ஆட்கள வெச்சு கயிறு கட்டி வரிசை வரிசையா நடவு செஞ்சேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சுது. அதுல இருந்து அந்த முறையைத்தான் இன்னமும் கடைபிடிக்கிறேன் (இதை ஜப்பான் நடவு என்பார்கள்)
இந்த முறையில நடவு செய்யும்போது ஏக்கருக்கு 2,500 கிலோ நெல் கிடைக்குது. விதைநெல்லுக்காக அதைக் காய வெச்சு, சுத்தப்படுத்துறப்போ 1,800 கிலோ நெல் கிடைக்குது. விதைநெல்ங்கறதால, சந்தையில் வழக்கமா நெல்லுக்கு கிடைக்கிற விலையைவிட கூடுதல் விலை கிடைக்குது. எல்லாச் செலவுகளும் போக, எப்படியும் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைச்சுடும். 25 ஏக்கர்ல நெல் மூலமாவே வருஷத்துக்கு ரெண்டரை லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைச்சுடுது. ஆனா, இதைவிட அதிகளவு வருமானம் இயற்கைக் காய்கறி சாகுபடி மூலமா ரெண்டு ஏக்கர்லயே கிடைச்சுடுது" என்று காய்கறி சாகுபடிக்குக் கட்டியம் கூறியவர், தொடர்ந்து சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
நாற்றுதான் நல்லது!
கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய காய்களுக்கு நாற்று உற்பத்தி செய்துதான் நடவு செய்யவேண்டும். பசுமைக்குடில் அமைத்து, குழித்தட்டுகளில் நாமே நாற்றுகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். இதற்கு வாய்ப்பில்லையெனில், நாற்றுகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் எல்லா வகையான காய்கறிகளையுமே ஆடிப் பட்டத்திலும், மார்கழிப் பட்டத்திலும் நடவு செய்யலாம். காய்கறிகளுக்கு வடிகால் வசதியுள்ள எல்லா வகை நிலங்களும் ஏற்றது.
நடவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் (ஆடிப்பட்ட நடவு என்றால் வைகாசி மாதத்தில்), ஏக்கருக்கு 10 கிலோ என்ற கணக்கில் தக்கைப் பூண்டு அல்லது சணப்பைத் தூவி விதைக்க வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், 6 கிலோ காராமணி விதையை விதைக்கலாம். விதைத்த 40ம் நாள் பூ எடுக்கத் தொடங்கும். பின் அப்படியே அவற்றை மடக்கி உழவு செய்ய வேண்டும். பின் ஏக்கருக்கு 5 டிராக்டர் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டிக் கலைத்து, குறுக்கு நெடுக்காக இரண்டு சால் டிராக்டர் உழவும், ஒரு சால் பவர் டில்லர் மூலம் உழவு செய்ய வேண்டும்.
அடுத்து, ஐந்து அடி இடைவெளியில் 50 சென்டி மீட்டருக்கு ஒரு நீர் சொட்டும் பகுதி என்ற அளவில், சொட்டு நீர்க்குழாய்களை அமைக்க வேண்டும். நீளவாக்கில் சொட்டு நீர்க்குழாய் அமையும் இடத்தில், நிலத்தில் ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழத்துக்கு வாய்க்கால்களை எடுத்து அதனுள் புங்கன் இலை, வேம்பு இலை, தொழுவுரம் ஆகியவற்றை கலந்து இட்டு மண்ணை நிரப்பி மூடவேண்டும். இந்த வாய்க்காலின் மையப் பகுதியில் சொட்டுநீர்க் குழாய் அமையுமாறுச் செய்ய வேண்டும்.
சந்தைக்கேற்ப விதைக்க வேண்டும்!
உங்கள் பகுதியில் இருக்கும் சந்தை வாய்ப்புக்கேற்றவாறு ஒவ்வொரு காய்க்கும் தேவையான அளவு நிலத்தைத் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அப்படி பிரித்த நிலத்தில், தண்ணீர் சொட்டும் பகுதிக்கு இருபுறமும் ஒரு அடி இடைவெளியில் நான்கு விரல்கிடை அளவுக்கு குழிபறித்து, 50 கிராம் உயிர் உரக்கலவையை (பார்க்க பெட்டிச் செய்தி) வைத்து, ஒவ்வொரு குழியிலும் கத்திரி, மிளகாய், தக்காளி... என தேவையான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வெண்டை, கொத்தவரை விதைகளை ஒரு குழிக்கு இரண்டு விதை வீதம் நேரடியாகவும் நடவு செய்யலாம்.
கொடி வகைப்பயிர்களாக இருந்தால், மூங்கில் கழிகளை ஊன்றி '16 எம்.எம்' இரும்புக் கம்பி மூலம் இணைத்துக் கட்டி 'ஃபிளாஸ்டிக்' ஒயரால் பந்தல் பின்னிக்கொள்ள வேண்டும்.
பிறகு, ஊடுபயிராக அனைத்து காய்கறிகளுக்கிடையிலும் சொட்டு நீர்க்குழாய்க்கு அருகில் காராமணி விதைகளை விதைத்துவிட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. நடவு செய்த 3ம் நாளில் இருந்து அறுவடை முடியும் வரை, வாரம் ஒரு முறை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா... போன்ற நுண்ணுயிர்கள் கலந்துள்ள திரவ வடிவ இயற்கை உரத்தைக் கலந்துவிட வேண்டும். ஹியூமிக் அமிலம், மண்புழு உரநீர் ஆகியவற்றைக்கூட இயற்கை உரத்துக்குப் பதிலாக அதே அளவில் கலந்து விடலாம். அல்லது இவை மூன்றையும் வாரம் ஒன்றாக மாற்றி மாற்றியும் கொடுக்கலாம். அறுவடை முடியும் வரை சொட்டு நீரில் கலந்தும் விடலாம்.
பூச்சிகளைக் கவரும் காராமணி!
15, 30 மற்றும் 45ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். மூன்றாவது களையெடுப்பின்போது, செடிகளுக்கு மண் அணைத்துவிட வேண்டும். கொடி வகைப்பயிர்களில் கொடி படர ஆரம்பிக்கும்போது... கவைகளை ஊன்றி பந்தலில் படருமாறு ஏற்றிவிட வேண்டும். காராமணி இருப்பதால், காய்கறிச் செடிகளில் பெரும்பாலும் பூச்சித் தாக்குதல் இருக்காது. இருந்தாலும், ஆங்காங்கு மஞ்சள் பொறிகளையும் வைக்கலாம் (பழைய டால்டா டப்பாக்களில் மஞ்சள் வண்ணத்தைப் பூசி, அதன் மீது கிரீஸைத் தடவி ஆங்காங்கு கட்டைகளை ஊன்றி கவிழ்த்து வைத்துவிட வேண்டும். மஞ்சள் வண்ணத்தால் பூச்சிகள் கவரப்பட்டு, அருகில் வரும்போது கிரீஸில் ஒட்டிக் கொண்டு இறந்து விடும்).
இதற்கு மேலும் பூச்சிகள் தாக்கினால், வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்கலாம். அவற்றுக்கும் கட்டுப்படா விட்டால் பாதிப்புக்கேற்ற அளவுக்கு இயற்கைப் பூச்சிக்கொல்லிகளைத் தேர்வு செய்து தெளிக்கலாம்.
அறுவடை... அமோக அறுவடை!
கொத்தவரை 30ம் நாளில் அறுவடைக்கு வரும். வாரம் ஒரு பறிப்பு வீதம் எட்டு பறிப்புகள்; பாகல், புடலை ஆகியவை 60ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து 70ம் நாளில் இருந்து பறிப்புக்கு வரும். தினம் ஒரு பறிப்பு என 90 பறிப்புகள்; வெண்டை 30ம் நாளில் அறுவடைக்கு வரும். தினம் ஒரு பறிப்பு என 60 பறிப்புகள்; கத்திரி 75ம் நாளில் அறுவடைக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மொத்தம் 135 பறிப்புகள்; தக்காளி 90ம் நாளில் அறுவடை தொடங்கி தினம் ஒரு பறிப்பு என 30 பறிப்புகள்; மிளகாய் 75ம் நாளில் அறுவடை தொடங்கி வாரம் ஒரு பறிப்பு என 18 பறிப்புகள் வரும்.
ஒரு காய் அறுவடை முடிந்தவுடன், அந்தச் செடிகளை அழித்துவிட்டு, சற்று தள்ளி அந்த இடத்தில் வேறொரு வகை செடியை நடவு செய்து விட வேண்டும். இதேமாதிரி மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தால், ஆண்டு முழுக்க தொடர்ந்து காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்"
விலையை நிர்ணயிப்பது நான்தான்!
சாகுபடி பாடத்தை முடித்த ஜீவானந்தம் விற்பனை மற்றும் வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ''நான் என்னோட ரெண்டு ஏக்கர்லயும் விளையுற காய்களை விக்குறதுக்காக அலையுறதேயில்ல. இயற்கை முறை விவசாயத்துல விளைஞ்ச காய்கறிங்கிறதால உள்ளூர்க்காரங்களே வந்து வாங்கிக்கிறாங்க. தோட்டத்துலேயே எடை போட்டு வித்துடுறேன். மிச்சமானாலோ அல்லது அதிக அறுவடை வந்தாலோதான் வெளிய அனுப்புவேன்.
சந்தையில காய்கள் விக்குற விலையைப் பத்தியும் கவலைப் படுறதேயில்லை. தக்காளி வெளிமார்க்கெட்ல நாப்பது ரூபாய்க்கு வித்தாலும் சரி, அஞ்சு ரூபாய்க்கு வித்தாலும் சரி நான் கிலோ எட்டு ரூபாய்னு ஒரே விலை நிர்ணயம் பண்ணி வெச்சுருக்கேன். என்னோட செலவுக் கணக்குகளுக்கு ஏற்ப நானே போட்டு வெச்சுருக்கற விலை. அந்த விலைக்குதான் விப்பேன். அதேமாதிரிதான் மத்த எல்லாக் காய்களுக்குமே கிலோ பத்து ரூபாய்னு நிர்ணயம் பண்ணி வெச்சுருக்கேன். பாகக்காயை மட்டும் கிலோ 20 ரூபாய்னு விக்குறேன். அதனால என்கிட்ட எப்பவுமே காய்கள் மீதமாகுறதில்லை.
ஆண்டு முழுக்க அமோக அறுவடை!
எப்பவுமே ஒரே மாதிரியான விலைக்குக் கிடைக்கறதால பக்கத்து ஊர்களில் இருக்குற கடைக்காரங்ககூட நேரடியா என்கிட்ட வந்து வாங்கிக்கிறாங்க. என்னோட வீட்டுலயும் காய்கறி விற்பனை நடக்கும். அதை என்னோட மனைவி சுமதி கவனிச்சுக்குவாங்க. இரண்டரை ஏக்கர்ல இருந்து தினமும் 200 கிலோ வரை காய்கள் கிடைக்குது. சராசரியா ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதிகமா மழை பெய்யுற காலங்களைத் தவிர... மத்த நாட்களில் எல்லாம் காய்கறிகள் கிடைச்சுட்டே இருக்கும். எப்படியும் வருஷத்துக்கு ஒன்பது மாசம் காய்கறிகள் மூலமா தொடர்ந்து வருமானம் கிடைச்சுட்டே இருக்கும்" என்று சந்தோஷமாகச் சொன்ன ஜீவானந்தம்,
"காய்கறித் தோட்டத்தை முழுசா இயற்கைக்கு மாத்திட்டேன். நெல் சாகுபடியை மட்டும்தான் முழுசா இன்னமும் மாத்த முடியலை. ஆனா, குறைவான அளவுதான் ரசாயன உரத்தைத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் அதையும் முழுசா இயற்கைப் பக்கம் திருப்பிடுவேன்" என்று உற்சாகத்தோடு சொன்னார்
ஆடு, மாடு, கோழிகளில் ஆதரவான லாபம்!
ஜீவானந்தம் கொட்டில் முறையில் ஆடுகளையும், முட்டைகளுக்காக ஒயிட் லெக்கான் கோழிகளையும் வளர்த்து வருகிறார், தவிர தீவனங்கள், மற்ற பயிர்களுக்கான தொழுவுரத் தேவைக்காக மாடுகளையும் வளர்த்து வருகிறார். அதைப்பற்றிப் பேசிய அவர், "கொட்டில் அமைச்சு, அதுலதான் ஆடுகளை வளக்குறேன். நாட்டுஆடுகளில் 48 பெட்டைகளும்,
2 ஜமுனாபாரி கிடா ஆடுகளையும் சேத்து மொத்தம் 50 ஆடுக இருக்கு. கொட்டில் பக்கத்துலேயே ஆடுங்க உலாவுறதுக்கான இடத்தையும் ஒதுக்கியிருக்கேன். ஆளுங்க கிடைச்சா மேய்ச்சலுக்கு அனுப்புவேன். இல்லேன்னா, கொட்டில்லயே தீவனத்தை வெட்டிப் போட்டுடுவேன். தீவனத்துக்காக மீன்குளத்துக் கரையில சூபாபுல், அகத்தி, கோ-4 மாதிரியான தீவனங்களை விதைச்சுருக்கேன். ஆடுகள் மூலமா வருஷத்துக்கு 100 குட்டிகள் கிடைக்குது. ஆறு மாசம் வரைக்கும் குட்டிகளை வளத்து, அப்படியே ஒரு குட்டி 1,500 ரூபாய்னு வித்துடுவேன். ஆடு மூலமா வருஷத்துக்கு 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பராமரிப்பு, தீவனம்னு செலவுகள் போக வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
கூண்டு அமைச்சு அதுல 30 ஒயிட் லெக்கான் கோழிகள் இருக்கு. இதுங்க மூலமா தினம் 30 முட்டைகள் கிடைக்கும். ஒரு முட்டை 2 ரூபாய் அம்பது காசுனு விற்பனை பண்ணிடுவேன். அதோடு கோழியோட கழிவுகள் உரமாவும் பயன்படுது. விவசாய வேலைக்காக ரெண்டு காளைகளையும், பாலுக்காக மூணு பசுமாடுகளையும் வளக்குறேன். சாணம், மாட்டுச்சிறுநீருக்காகத்தான் முக்கியமா மாடுகளை வளக்குறேன். வீட்டுத்தேவைக்குப் போக மீதிப்பாலை விற்பனை செஞ்சுடுவேன். நெல் இருக்கறதால வைக்கோலுக்குப் பஞ்சம் கிடையாது. அதில்லாம பசுந்தீவனத்தையும் கொடுக்குறேன். அதனால தீவனச் செலவும் சுத்தமா கிடையாது" என்கிறார்.
வருட வருமானத்துக்கு மீன்!
அரை ஏக்கரில் மீன்குஞ்சு வளர்ப்புக் குளமும், ஒன்றரை ஏக்கரில் மீன் வளர்ப்புக் குளமும் அமைத்து அதில் மீன் வளர்த்து வருகிறார், ஜீவானந்தம்.
"ஆத்துல தண்ணி வரும்போது குளம் நிரம்பிடும். உடனே மீன் குஞ்சுகளை வாங்கி குஞ்சுக்கான குளத்துல விட்டுடுவேன். ஆறு மாசம் கழிச்சு அதுல இருக்குற மீன்களைப் பிடிச்சு பெரிய குளத்துல விட்டுடுவேன். இப்படி இடம் மாத்தி வளக்குறதால எட்டு மாசத்துலயே மீன்கள் ஒண்ணரைக் கிலோ எடைக்கு வந்துடுது. குஞ்சு இருபது பைசானுதான் வாங்குறேன். ஒரு தடவைக்கு
3,000 குஞ்சுகள் வரை விட்டா... எட்டு மாசம் கழிச்சு எப்படியும் 3,000 கிலோ மீன் தேறிடும். கிலோ 65 ரூபாய்க்கு விற்பனையாகுது. அதுக்கான அடர் தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக இதுல 1,50,000 ரூபாய் வரை வருமானம் கிடைச்சுடுது" என்கிறார் ஜீவானந்தம்.
குழித்தட்டுகளில் நாற்று
10 கிலோ மட்கிய தேங்காய் நார்க்கழிவு, 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனாஸ், 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, இவற்றை குழித்தட்டுகளில் நிரப்ப வேண்டும். பின் நாற்று உற்பத்தி செய்ய வேண்டிய காய்களின் விதையை குழிக்கு ஒன்றாக ஊன்றி குழித்தட்டுகளை பசுமைக் குடிலுக்குள் அடுக்கி வைத்துவிட வேண்டும். 10 நாட்கள் கழித்து, ஒரு பூவாளிக்கு 50 மில்லி ஹியூமிக் அமிலத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். 17ம் நாளில் பூவாளிக்கு 100 மில்லி ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். 30 நாட்கள் கழித்து நாற்றுகளை நடவு செய்யலாம்.
உயிர் உரக்கலவை
அசோஸ்பைரில்லம்- 2 கிலோ, சூடோமோனஸ்-2 கிலோ, பாஸ்போ-பாக்டீரியா-2 கிலோ, டிரைக்கோகிரம்மா விரிடி- 2 கிலோ, மண்புழு உரம் - 10 கிலோ ஆகியவற்றைக் கலந்து, நடவு செய்யும் இடத்தில் செடிக்கு 50 கிராம் வீதம் வைக்க வேண்டும்.
தோட்டத்தில் வாங்கினா லாபம்!
சுமதியிடம் காய்கறி வாங்க வந்திருந்த அன்னலட்சுமியிடம் பேசினோம். "கடைகள்ல வாங்குறதைவிட தோட்டத்துலேயே காய் வாங்குறப்போ புதுசா இருக்குறதால சுவையா இருக்கும். ரெண்டு நாள் வெச்சுருந்துகூட சமைக்கலாம். மார்க்கெட் விலையை விட கம்மியான விலையிலயும் கிடைக்குது. ரெண்டு நாளைக்கு ஒருமுறை இவங்ககிட்ட தேவையான காய்களை வாங்கி வெச்சுக்குவேன்" என்று சொன்னார்.
தொடர்புக்கு, ஜீவானந்தம்,
அலைபேசி 94433-75262.
படங்கள் கே. குணசீலன், செ. சிவபாலன்
Source:pasumaivikatan

1 comment:

Unknown said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238