Tuesday

சிறிய... யோசனை... பெரிய பலன்...

சிறிய... யோசனை... பெரிய பலன்...

பைசா செலவில்லாமல் பலே பாசனம் !

சொட்டுநீர்ப் பாசனம் என்றதுமே... 'அதுக்கு டேங்க் வேணும், ஆயிரக்கணக்குல செலவழிக்கணும்... அதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகுமா?' என்கிற கவலைகள் அப்பிக்கொள்ளும். ஆனால், காலி தண்ணீர் பாட்டில்கள், மருத்துவமனைக் கழிவுகளான குளுக்கோஸ் பாட்டில் டியூப்கள்... என, செலவில்லாமல் கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, தன்னிடம் உள்ள மரங்களுக்கு சொட்டுநீர் முறையில் தண்ணீர் பாய்ச்சி அசத்தி வருகிறார், பாலசுப்ரமணியன்!
சின்னச்சின்ன தொழில்நுட்பங்கள், குட்டிக்குட்டிக் கருவிகள்... என தங்களுக்குத் தேவையானவற்றை, தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளை 'பசுமை விகடன்’  தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் இங்கே அறிமுகமாகிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலூகா கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்த பாலசுப்ரமணியன்!
காலை வேளையன்றில் தேடிச்சென்று சந்தித்தபோது... வரப்பில் அமர்ந்தபடியே பேச ஆரம்பித்தார், பாலசுப்ரமணியன். ''2 ஏக்கர்ல கரும்பும், 6 ஏக்கர்ல நெல்லும் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதில்லாம தனியா இருக்குற ஒரு ஏக்கர்ல உளுந்து, சோளம் போட்டிருக்கேன். தோட்டத்தோட வேலி ஓரத்துல நாட்டுத்தேக்கு, வேங்கை மரங்களைக் கலந்து நட்டு வெச்சுருக்கேன். ரெண்டும் சேர்த்து மொத்தம் 70 மரங்கள் இருக்கு.
தோட்டத்துக்கு நாலு பக்க ஓரமுமே மேடா இருக்கு. நடுப்பகுதி பள்ளமா இருக்கு. அதனால, வேலி ஓர மரங்களுக்கு தண்ணி பாய்ச்சுறது ரொம்ப சிரமமா இருந்தது. அதில்லாம இப்போ இருக்குற கரன்ட் பிரச்னையில பயிருக்குத் தண்ணி பாய்ச்சுறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல மரங்களுக்கு எப்படி பாய்ச்சுறது?
ஆனா, இந்த கரன்ட் பிரச்னையெல்லாம் வர்றதுக்கு முன்னயே தனித் தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல, மண்பானையில சின்ன ஓட்டை போட்டு மரத்துக்குப் பக்கத்துல வெச்சு தண்ணி நிரப்பிட்டிருந்தேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சொட்டிட்டே இருக்கும். அதுல என்ன பிரச்னைனா, அடிக்கடி பானையில இருக்குற ஓட்டையில மண் அடைச்சுக்கும். அதைச் சரி பண்றது பெரிய வேலையாயிடுச்சு.
இதுக்கு மாற்றா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தப்போ, குளுக்கோஸ் ஏத்திக்கிட்டிருந்தாங்க. அதுல சொட்டு சொட்டா குளுக்கோஸ் தண்ணி விழுந்துக்கிட்டிருந்துச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு பொறி தட்டிடுச்சு. அந்த பாட்டிலையும் டியூபையும் பயன்படுத்தி தண்ணி பாய்ச்ச முடியுமானு யோசிச்சு செஞ்சு பாத்தேன். அது சரியா அமைஞ்சுடுச்சு'' என்றபடியே எழுந்த பாலசுப்ரமணியன், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.
அடிப்பாகம் அகற்றப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் கவிழ்த்து, கட்டித் தொங்கவிட்டு, அதில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் குழாய்களைச் செருகி வைத்திருந்தார். பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர், குழாய்கள் மூலமாக சொட்டிக் கொண்டிருந்தது.
தொடர்ந்தவர், ''குளுக்கோஸ் ஏத்தின பிறகு அந்த பாட்டில்களை சும்மாதான் போட்டு வெச்சுருப்பாங்க. அதனால இந்த டியூப்கள் இலவசமாவே கிடைக்கும். ஆனா, குளுக்கோஸ் பாட்டில்களோட கொள்ளளவு கம்மிங்கறதால... அந்த பாட்டில் நமக்குப் பயன்படாது. அந்த டியூப் மட்டும்தான் பயன்படும். 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கூல் டிரிங்க்ஸ் பாட்டில், வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்திக்கலாம்.
பாட்டில்களோட அடிப்பாகத்தை நீக்கிடணும். டியூபை நல்லா சுத்தமா கழுவி பாட்டிலோட மூடிப்பகுதிக்கு அருகில் இணைக்கணும். இந்த டியூப்ல தண்ணியோட அளவைக் கட்டுப்படுத்தறதுக்கு உருளை மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும். அது மூலமா ஒரு நிமிஷத்துக்கு ஒரு சொட்டு தண்ணி விழுகுற மாதிரி அமைச்சுக்கிட்டா போதும்... சொட்டுநீர்ச் சாதனம் தயார்.
கொஞ்சம் வளந்த மரம்னா, அதோட கிளையிலேயே கம்பி மூலமா இந்த பாட்டிலைக் கட்டித் தொங்க விட்டுடலாம். நாம எளிதா தண்ணீர் நிரப்புற உயரத்துல தொங்க விட்டுக்கணும். சின்னக் கன்றுகளா இருந்தா... பக்கத்துல ஒரு குச்சியை நட்டு, அதுல கட்டித் தொங்க விடலாம். காத்துல ஆடாம இருக்கற மாதிரி டியூபையும் மரத்தோட அடிப்பாகத்துல கட்டிடணும். கட்டும்போது டியூப் நசுங்கிடக் கூடாது. மரங்கள் பெருசான பிறகு, பெரிய கேன்களைத் தொங்க விட்டுக்கலாம்.
ஒரு தடவை தண்ணி நிரப்பிட்டா... ரெண்டு நாளைக்கு சொட்டிக்கிட்டே இருக்கும். அதனால ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பாட்டில்களை நிரப்பினா போதும். இந்த மாதிரி தண்ணி விடுறப்போ சீரான இடைவெளியில தண்ணி கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதனால வேருக்குத் தேவையான ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும். களைகளும் மண்டாது.
70 மரத்துலயும் இப்படி பாட்டில்களைக் கட்டி வெச்சுருக்கேன். அதை  நிரப்புறதுக்கு எனக்கு ஒரு மணிநேரம்தான் ஆகுது. அதோட கரன்ட் பிரச்னை பத்திக் கவலையில்லை. எனக்கும் உடற்பயிற்சி மாதிரி அமைஞ்சுடுது'' என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், பாலசுப்ரமணியன்.


தொடர்புக்கு,
பாலசுப்ரமணியன்,
செல்போன்: 99656-74223.


கு. ராமகிருஷ்ணன்

Source: pasumaivikatan

No comments: