Saturday

முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...


முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...
ரேபயிரை நம்பி உழுதா... உலை வைக்க முடியாது...’
-இது, கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை. அந்தளவுக்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. பசுமைப் புரட்சி என்ற மாயையால் காணாமல் போனது, இந்த கலப்புப் பயிர் விவசாயம். ஆனாலும், வழக்கத்தை விடாத விவசாயிகள் சிலர், இன்றும் ஊடுபயிர் சாகுபடியை விடாமல் செய்து வருகிறார்கள் இந்த ராஜேந்திரனைப் போல!
தேனி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திரன், கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்தே மல்லிகைப் பூ விவசாயத்தை முதலில் துவங்கி, பிறகு படிப்படியாக முருங்கை, வெண்தேக்கு என அதற்குள்ளேயே நடவு செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.
தோட்டத்தில் தனது செல்ல நாய்களை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு தனி ஆளாக, முருங்கைக்கு இடையில் களை எடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை சந்தித்தபோது, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இந்த ரெண்டரை ஏக்கர்தான் என்னோட பூர்வீகச் சொத்து. கண்டமனூருக்குத் தலைமாட்டுல (அருகில்) வைகை ஓடுனாலும், மழைக் காலத்துலகூட கெணத்துல கொஞ்சமாத்தான் தண்ணி ஊறும். அது அரைக்குழிக்குத்தான் (30 சென்ட் நிலம்) பாயும். அந்தளவுக்குத் தண்ணிக்குத் தட்டுப்பாடான பகுதி. கெணத்தை உத்து உத்துப் பாத்துகிட்டே... பெய்யுற மழையை வெச்சு கம்பு, பருத்தினு போட்டுக்கிட்டிருந்தேன். இருக்குற தண்ணிய வச்சு அரைக்குழியில 300 மல்லிகை நாத்தை நட்டேன்.நானும் என் பொஞ்சாதியுமாத்தான் எல்லா வேலையையும் செய்வோம். பூச்செடிக்கு இடையில 10 அடி இடைவெளி விட்டிருந்தேன்.
அதுல, ஆறு வருஷத்துக்கு முன்ன 300 முருங்கையை நட்டேன். அது காய்ப்புக்கு வந்த சமயத்துல நல்ல விலை கிடைச்சுது. அதனால, அதுல 350 போத்து வெட்டி, மீதி இருந்த ரெண்டு ஏக்கர்லயும் நட்டு விட்டுட்டேன். அந்த நேரம் நல்ல மழையும் கிடைச்சதால, நல்ல காய்ப்பு. ஒரே வருசத்துல ரெண்டே கால் லட்ச ரூபாய் அளவுக்கு காய் ஒடிச்சோம். கூலிக்கு ஆள் கூப்பிடாம, நாங்களாவே எல்லா வேலையும் பாத்ததால பணமும் மிஞ்சுச்சு. அதுலதான் ரெண்டு பொண்ணுங்களுக்கும் சீர் செனத்தி செஞ்சு, கல்யாணத்த முடிச்சு வச்சேன்.
அடுத்த வருஷமும் முருங்கையில நல்ல காய்ப்பு. அதுக்கேத்த மாதிரி விலையும் கிடைச்சது. அதை, எனக்கு யோகம்னுதான் சொல்லணும். அதுல கிடைச்ச பணத்தை வெச்சு, ஆயிரம் அடிக்கு போர் போட்டதுல ஆண்டவன் புண்ணியத்துல தண்ணி கிடைச்சுது. இப்போ போர் தண்ணியை கிணத்துல விட்டு, பயிருக்குப் பாய்ச்ச ஆரம்பிச்சுருக்கேன்'' என்ற ராஜேந்திரன், ஊடுபயிராக, தேக்கு நடவு செய்த கதைக்கு வந்தார்.
''அந்த சமயத்துல ஃபாரஸ்ட் ரேஞ்சர் கூடல்சாமி எங்கிட்ட, 'அரசாங்கத்துல இலவசமா மரக்கன்னும், வளக்கறதுக்கு பணமும் தர்றாங்க’னு சொன்னாரு. அதோட தோட்டத்துக்கு வந்து பாத்துட்டு, 'முருங்கைக்கும் மல்லிக்கும் இடையிலயே அழகா வெண்தேக்கு (குமிழ்) மரத்தை நடலாம். முருங்கைக்குக் கொடுக்கற உரம், தண்ணியே போதும். தனியா இதுக்குனு எதையும் செலவழிக்க வேண்டியதில்லை. 18 வருஷத்துல புதையல் எடுத்த மாதிரி பணம் கிடைக்கும்’னு ஆலோசனையும் சொன்னார்.
16 அடிக்கு ஒரு மரம்னு கணக்குப்போட்டு, இருந்த இடைவெளியில 800 வெண்தேக்குக் கன்னுகளை வெச்சுட்டேன். நடவுச்செலவுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து, கன்னுகளையும் இலவசமா கொடுத்தாங்க. ஒரு வருசம் கழிச்சு, கன்னுக நல்லா வளர்ந்துருக்கறதப் பார்த்துட்டு, மறுபடியும் 1,500 ரூபாய் கொடுத்தாங்க. நாலு வருஷத்துல மரம் ஒவ்வொன்னும் தொடை அளவுக்குப் பெருத்திருக்கு'’ என்று நம்மை அழைத்துக் கொண்டு போய், பெருமையோடு மரங்களைக் காட்டிய ராஜேந்திரன்,  
''முருங்கைக்கு ரசாயன உரம் கொடுத்து கட்டுபடியாகல. அதனால இப்போ தொழுவுரத்தையும், கடைகள்ல கிடைக்கற இயற்கை உரத்தையும்தான் கொடுக்கிறேன். ஆனா, ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சாத்தான் முருங்கையில புழுவை ஒழிக்க முடியுது. இப்படி முப்பதாயிரம் ரூபாய் அளவுக்கு செலவு போக, முருங்கையில வருசத்துக்கு மூணு லட்சம் லாபமா கைக்கு கிடைக்குது. மல்லி மூலமா வருசத்துக்கு நாப்பதாயிரம் ரூபாய் கிடைக்குது.
இப்போ, கட்டாப்புல (வேலி) இருந்த வேலிக்கருவேலைப் பிடுங்கிட்டு அதுல செவ்வரளியை வெச்சுருக்கேன். அதுலயும் கைசெலவுக்கு ஆகுற மாதிரி வருமானம் கிடைக்குது'' என்றவர்,
''தண்ணியும் கிடைச்சு, சளைக்காம பாடுபடறதுக்கும் மனுஷன் துணிஞ்சிட்டான்னா... விளையாத பூமியும் விளையுமைய்யா. 'சம்சாரி கணக்கு பார்த்தா சாட்டைக்குச்சிகூட
மிஞ்சாது’னு சொல்லுவாங்க. அது ஏதோ ஒரு கெட்ட நேரத்துல சொன்னதா இருக்கும். இதையே வருஷம் பூரா சொல்லிக்கிட்டு இருக்கறது நியாயம் கிடையாது'' என்று தெம்பாகச் சொல்லி நமக்கு விடை கொடுத்த ராஜேந்திரன், களையெடுப்பைத் தொடர ஆரம்பித்தார்.
தொடர்புக்கு,
ராஜேந்திரன், செல்போன்: 97151-30253
மணி, செல்போன்: 94436-22812

இஞ்சி + பூண்டுக் கரைசல்!
''முருங்கையில் வரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை, இயற்கை வழியிலேயே தடுக்கலாம்...'' என்று சொல்லும் சின்னதாராபுரம் மணி, தன்னுடைய அனுபவத்திலிருந்து இதற்குச் சொல்லும் வைத்தியம்-
''இஞ்சி, பூண்டு, புகையிலைத்தூள் ஆகிய மூன்றையும் தலா 500 கிராம் அளவுக்கு எடுத்து, அரைத்து மண்பானையில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு மாட்டின் சிறுநீர் ஊற்றி, இரண்டு நாட்கள் அப்படியே ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி என்கிற அளவில் இதைக் கலந்து தெளித்தால்... பூச்சி, நோய் எட்டிக்கூட பார்க்காது.''
இரா. முத்துநாகு
படங்கள்: வீ. சக்திஅருணகிரி
Source:pasumaivikatan

1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238