Thursday

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!


பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!

வீரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... பாரம்பரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... அதிக பாடும் இல்லாமல்... பண்டுதமும் பார்க்காமல்... எளிதான சாகுபடி மூலமாகவே... நிறைவான லாபத்தைப் பார்ப்பதுதான் இயற்கை வழி விவசாயச் சூத்திரத்தின் குறிக்கோள்!
இதைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகளில் ஒருவராக, இயற்கை முறையில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்து அசத்தலான வெற்றியை அறுவடை செய்து வருகிறார்... திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்.
''பரம்பரையா விவசாயம்தான் தொழில். நெல் அரவை மில், உரக்கடையெல்லாம் அப்பா வெச்சுருந்தார். நான் ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சுட்டிருந்தேன். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பத்தியும், அவர் இயற்கை விவசாயம் செஞ்சதைப் பத்தியும் ஸ்கூல்ல தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் லீவுக்கு வரும்போது, அப்பாகிட்ட சொல்லுவேன். அதையெல்லாம் கேட்டுட்டு,
கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சார்.
நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு, சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். 2003-ம் வருஷம் அப்பா இறந்துட்டார். அதிலிருந்து விவசாயத்தைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்கதை சொன்ன ஆனந்த், தொடர்ந்தார் தன் விவசாய அனுபவங்களை.
இணையம் மூலம் இயற்கை!
''மில்லுக்குப் பக்கத்துலேயே இருந்த மூணு ஏக்கர் நிலத்துல, எனக்குத் தெரிஞ்சளவுக்கு இயற்கை வழி விவசாயத்தைச் செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோட பயிற்சியில கலந்துக்கற வாய்ப்பு கிடைக்கவே... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இண்டர்நெட் மூலமாவும் நிறைய தகவல்களைத் தேடிப்பிடிச்சேன். எல்லாத்தையும் சோதனை அடிப்படையில செயல்படுத்திப் பார்த்தேன். அதுல பூச்சிகளை விரட்டுறதுக்கு வசம்புக் கரைசல் நல்ல பலன் கொடுத்தது. அதைத் தெளிக்கிறப்போ பயிர்களுக்கு நோயும் வர்றதில்லை. அதனால, அதையும் பஞ்சகவ்யாவையும் மட்டும்தான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.
இப்போ, ஒன்றரை ஏக்கர்ல நெல் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கேன். மீதி நிலத்துல காய்கறி, எள், உளுந்து, கடலைனு மாத்தி மாத்தி சாகுபடி செய்றேன். ஒருபோகம் குள்ளங்கார் ரக நெல் விதைச்சா... மறுபோகம் வெள்ளைப் பொன்னி போடுவேன். இப்படி மாத்தி மாத்தி விதைப்பேன். சராசரியா, ஏக்கருக்கு 30 மூட்டை (75 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைக்குது. இதோ... சம்பா பட்டத்துல போட்ட வெள்ளைப் பொன்னி அறுவடைக்குத் தயாரா இருக்குது''
-அனுபவப் பாடத்தை முடித்த ஆனந்த், ஒன்றரை ஏக்கருக்கான வெள்ளைப் பொன்னி சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
அனைத்துப் பட்டங்களும் ஏற்றவை!
'வெள்ளைப் பொன்னி ரகத்துக்கு வயது 180 நாட்கள். அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வரும். அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய, ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு 7 கிலோ விதைநெல் தேவை. நாற்றங்காலுக்காக 2 சென்ட் நிலத்தில் களைகளை அகற்றி, இரண்டு சால் உழவு செய்து, சேறாக மாற்றி சமப்படுத்தி, ஒரு கூடை தொழுவுரத்தைத் தூவ வேண்டும். விதைநெல்லுடன், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, சணல் சாக்கில் இட்டு 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, 36 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து... நாற்றங்காலில் இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி விதைக்க வேண்டும்.
15 நாளில் நாற்று!
விதைத்த பிறகு, தண்ணீரை வடித்துவிட வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாட்கள் வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் கட்டி வைத்து வடித்துவிட வேண்டும். அதன்பிறகு, தொடர்ந்து வழக்கம்போல தண்ணீர் கட்டி வர வேண்டும். 10-ம் நாள், தண்ணீரோடு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்துவிட வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் நாற்று தயாராகி விடும்.
ஆண்டுக்கொருமுறை தொழுவுரம்!
நாற்றங்கால் தயாரிக்கும்போதே வயலையும் தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தை இட்டு, நன்கு உழவு செய்ய வேண்டும் (தொடர்ந்து இயற்கை வேளாண்மை செய்பவர்கள்... ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம் இட்டால் போதுமானது. ஒவ்வொரு போகத்துக்கும் இட வேண்டியதில்லை).
ரோட்டாவேட்டர் மூலம் நிலத்தை சேறாக்கிக் கொள்ள வேண்டும். ரெண்டு கூடை எருவில் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அரை கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, நிலத்தில் தூவ வேண்டும். பிறகு, ஓரடி இடைவெளியில், குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்று பட்டுப்போனாலும் ஒரு நாற்று பிழைத்துக் கொள்ளும்.
15 நாளுக்கொரு முறை பஞ்சகவ்யா!
நடவில் இருந்து 25 நாட்கள் வரை வேர் மறையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் நிறுத்த வேண்டும். அப்போதுதான் நன்கு வேர் பிடித்து வளரும். அதன்பிறகு, அரையடி அளவுக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 15-ம் நாள், 150 லிட்டர் தண்ணீரில் நான்கரை லிட்டர் பஞ்சகவ்யா, நான்கரை லிட்டர் வசம்புக் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வசம்பை இடித்து, 15 நாட்கள் ஊற வைத்தால் வசம்புக் கரைசல் தயார்) ஆகியவற்றைக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இதேபோலத் தெளித்து வர வேண்டும்.
நடவு செய்த 25  மற்றும் 60-ம் நாட்களில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 120-ம் நாளில் கதிர் பிடித்து, 150-ம் நாளுக்கு மேல் முற்றி, 170-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.'
54 ஆயிரம் வருமானம்!
சாகுபடிப் பாடத்தைத் தொடர்ந்து மகசூல் மற்றும் வருமானம் பற்றி சொன்ன ஆனந்த், ''இதோ பாருங்க... வெள்ளைப் பொன்னியில ஒவ்வொரு தூர்லயும் முப்பத்தஞ்சுல இருந்து நாப்பது சிம்பு வரைக்கும் இருக்குது. ஒரு சிம்புக்கு, முன்னூறுல இருந்து மூன்னூத்தியிருபத்தஞ்சு மணிகள் இருக்குது. அறுவடை செய்யுறப்போ... எப்படியும் ஒண்ணரை ஏக்கர்ல இருந்து 50 மூட்டை (75 கிலோ மூட்டை) நெல் வரைக்கும் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பார்த்தாலும் 45 மூட்டைக்குக் குறையாது.
இப்போதைக்கு மார்க்கெட் நிலவரப்படி மூட்டைக்கு 1,200 ரூபாய் கிடைக்குது. இதன்படி பார்த்தா... 45 மூட்டை நெல்லுக்கு 54 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக, எப்படியும் 33 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.
காசி.வேம்பையன்
Source:pasumaivikatan 

No comments: