Wednesday

பயிர் பாதுகாப்பில் வேம்பு


பயிர் சாகுபடியில் ரசாயன மருந்துகள் அதிகம் உபயோகிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. எனவே ரசாயன மருந்துகளை குறைத்து, இயற்கையில் கிடைக்கும் பொருட்களை உபயோகித்து விவசாயிகள் பயன் பெறலாம்.

அவ்வாறு இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் பிரதானமானது வேம்பு. வேம்பின் கசப்பும், மணமும் எதிரியினங்களை சாப்பிட விடாமலும், பயிரை அண்டவிடாமலும் விரட்டுகின்றன.
பயிர்களை தாக்கும் பூச்சியினங்கள் வளர்ச்சி குன்றுதல், முட்டையிடுவது முதல் அந்துப்பூச்சியாவது வரை பாதிக்கப்படுகிறது. புகையான் பூச்சிகளின் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு உடற்கூறு அமைப்புகளின் நடைமுறை பணிகள் பாதிக்கின்றன.

வேப்பெண்ணெய் கரைசல் 2 சதவீதம்: வேப்பெண்ணெய் 2 லிட்டர், தண்ணீர் 100 லிட்டர், ஒட்டுத்திரவம் 1 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒட்டுத்திரவத்தை நன்கு கலந்து சீரான கலவையை தயாரிக்கவும். அக்கலவையில் வேப்ப எண்ணெயை சிறிது, சிறிதாக கலக்கி கொண்டே ஊற்றவும். கரைசல் பால் போல இருக்கும். அதை எக்டேருக்கு 500 லிட்டர் கரைசலாக கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

வேப்பங் கொட்டைச்சாறு 5 சதவீதம்: வேப்பங்கொட்டை 5 கிலோ. தண்ணீர் 100 லிட்டர். ஒட்டும் திரவம் 300 மி.லி., வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து தூளாக்கி சாக்கில் சிறுமூடையாக கட்டி தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் மூடையை அதே தண்ணீரில் கலக்கவும். இக்கலவையில் ஒட்டுத் திரவத்தை சிறிது சிறிதாக கலக்கியபடி ஊற்ற வேண்டும். எக்டேருக்கு 500 லிட்டர் தெளிக்க வேண்டும்.

வேப்பம் புண்ணாக்குச்சாறு 10 சதவீதம்: தரமான வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ. தண்ணீர் 100 லிட்டர். ஒட்டுத் திரவம் 300 மி.லி., வேப்பம் பருப்புச்சாறு தயாரிப்பதுபோல புண்ணாக்கை இடித்து தூளாக்கி 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து ஒட்டுத் திரவத்துடன் கலந்து தயாரிக்கவும். எக்டேருக்கு 500 லிட்டர் கலவையை தெளிக்கவும்.

வேப்பம் புண்ணாக்கு தரும் பலன்கள்: எக்டேருக்கு 250 கிலோ வரை நிலத்தில் வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நிலத்தின் வெப்பம், அமில, காரத்தன்மைகள், மண்ணில் பிராணவாயு அளவு, நூற்புழுக்களின் வளர்ச்சிக்கு பாதகமாகவும், அதேசமயம் பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவும் மாறுகிறது. பயிர்களின் நாற்றுப் பருவம் மற்றும் நட்டபின் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

தரமான வேப்பம் புண்ணாக்கை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து கடைசி உழவு சாலில் சீராக இடவேண்டும். செடியின் வேர் பாகத்திற்கு அருகில் 23 அங்குல ஆழத்தில் மண்ணுடன் கலக்க வேண்டும். இம்முறையை பயன்படுத்தி விவசாயிகள் ரசாயன மருந்துகளின் உபயோகத்தை குறைத்து, நல்ல பலனை பெறலாம்.

கி.ராஜேந்திரன், மேலூர்.


Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18956&ncat=7

No comments: