Wednesday

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு மானியம்

நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் சூழலில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதிக மகசூல் பெறலாம். தோட்டக்கலைத் துறை அளிக்கும் 100 சதவீத மானியத்தைப் பெற்று சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
100 சதவீதம் மானியம்: அபரிமிதமாக நீரைப் பயன்படுத்துவதை விட, அளவாக நீரைப் பயன்படுத்துவதால் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல்பூர்வமாகவும், அனுபவரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீர் சிக்கனம் நிறைவான மகசூலுக்கு வழிவகுக்கும். சொட்டுநீர்ப் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்குகிறது.
ஒரு ஏக்கருக்கு ரூ.43,816-க்கு மிகாமல் நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருதால் 5 ஏக்கர் வரைக்கும் எந்தப் பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பம் இருப்பின், அவருக்கு சொந்தமான பரப்பு முழுமைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை சிறு விவசாயி அமைத்துக் கொள்ளலாம்.
குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர், புன்செய் நிலமாக இருப்பின் இரண்டரை ஏக்கர் வரைக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுவதையும் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயன்கள்: சொட்டுநீர்ப் பாசன முறையால் நீரும் சத்துக்களும் வேரினில் கிடைக்கும்; நீரைச் சிக்கனப்படுத்தலாம்; பாசனத்துக்கு தனியாக ஆள் விடத் தேவையில்லை. இதனால் பாசன ஆள்கள் செலவு முற்றிலும் குறைகிறது.
சத்துக்கள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்பொழுது இடுஉரத்தில் 30 முதல் 50 சதவீதம்தான் கிடைக்கிறது. அதையே உரப்பாசனமாக இட்டால் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் 95 சதவீத தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும்பொழுது 50 சதவீதம் மட்டும் கிடைக்கும் சாம்பல்சத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 80 சதவீதம் கிடைக்கிறது.
குறைந்த செலவினம்: நீர் வேரை நேரடியாகச் சென்றடைவதால் களைகள் முளைப்பது குறைகிறது. களை எடுக்கும் செலவினம் பெருமளவு குறைகிறது. குறிப்பாக, களையெடுத்து மீள முடியாத வாழை சாகுபடியில் இது ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றிப் பயிர் வளர்வதால் 30 முதல் 60 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.
முன்னதாக முதிர்ச்சிக்கு வருவதால் முன்கூட்டியே கையில் காசு பார்க்கமுடியும். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும் எடையும் பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
யார் மானியம் பெறலாம்? வருவாய்த் துறை நிலவகைப்பாட்டின்படி நன்செய் நிலம் என்றால் இரண்டரை ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலம் இருப்பவர்கள் இந்த மானியம் பெறத் தகுதியானவர்கள். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போதிய நீர்ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.
பொதுவான நீர்ஆதாரம் கொண்ட சின்னஞ்சிறு விவசாயிகள் 2, 3 பேர் சேர்ந்தும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்: பயனாளி சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய சான்றிதழை வருவாய் வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தின் கணினிப் பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவிருக்கும் பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியைத் தெளிவாகக் குறிக்கும் ரேஷன் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புக்கு: வாழை, காய்கனிகள், மிளகாய், மலர்ப் பயிர்கள், பழமரப் பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து சிறு, குறு விவசாயிகள் நீர்ச் சிக்கனம், நிறைவான மகசூலுக்கு ஒரே நேரத்தில் வழிவகுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை மானியத்தில் அமைத்து பயன்பெற சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி

No comments: